தமிழ் மக்களின் உணர்வுகளோடு விளையாடுவதை நிறுத்தவேண்டும் முரளி!

சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்சவிற்கு ஆதரவு திரட்டும் நோக்கில் வியத்மக என்ற அமைப்பினர் நடத்திய மாநாட்டில் கலந்துகொண்டிருந்த சிறிலங்கா கிறிக்கட் அணியின் முன்னாள் நட்சத்திர சுழல் பந்துவீச்சாளர் முத்தையா முரளிதரன் தெரிவித்த கருத்துகளுக்கு தமிழர் தரப்பில் கடும் கண்டனங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

இந்த நிலையில் போராட்டத்தின் வரலாறு தெரியாமல் கிறிக்கட் வீரர் முத்தையா முரளிதரன் தமிழ் மக்களின் உணர்வுகளோடு விளையாடுவதாக மக்கள் சுதேச கட்சியின் பொதுச் செயலாளர் எஸ்.மதிராஜ் கடும் கண்டனம் வெளியிட்டிருக்கின்றார்.

யாழ் ஊடக அமையத்தில் நாட்டின் அரசியல் நிலமைகள் தொடர்பில் இன்று செவ்வாய்க்கிழமை கருத்து வெளியிட்ட மதிராஜ், ஒரு கிலோ சீனியின் விலையையே அறியாத முரளிதரன், தமிழ் மக்களின் உரிமைக்கான போராட்ட வரலாற்றை அறிந்திருப்பாரா என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

தமிழ் மக்கள் உரிமைகளுக்காக போராடிக்கொண்டிருக்கும் தற்போதைய சூழலில் யாழில் நடத்தப்படும் என்டபிரைஸஸ் ஸ்ரீலங்கா கண்காட்சி,மக்களுக்கு தேவையற்ற களியாட்டம் எனவும் எஸ்.மதிராஜ் சாடியுள்ளார்.

காணமால் போனவர்களுக்கான சட்டமூலம் ஒரு கண்துடைப்பு என சாடியுள்ள அவர், காணாமல் போனவர்களுக்கான அலுவலகம் மக்கள் மனதை ஆற்றவும் சர்வதேசத்தை ஏமாற்றவும் கொண்டுவரப்பட்ட ஒன்றெனவும் குறிப்பிட்டுள்ளார்.