அரசியலிருந்து ஓய்வு பெறும் நாளை அறிவித்தார் பிரதமர்

நேற்றையதினம் இரவு, பிரதமர் ரணிலுக்கும் அமைச்சர் சஜித்துக்கும் இடையில், முக்கிய அமைச்சர்கள் பங்குப்பற்றலுடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தையில், ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் இறுதித் தீர்மானம் எட்டப்படாத நிலையில் நிறைவடைந்துள்ளது.

எனினும், பிரதமருடனான சந்திப்புத் தொடர்பில், சஜித் பிரேமதாஸ தன்னுடைய தரப்பினருடன் கலந்துரையாடியதன் பின்னரே, ஊடகங்களுக்கு கருத்துதெரிவித்தபோது பிரதமருடனான பேச்சுவார்த்தையில் நல்லமுன்னேற்றம் ஏற்பட்டதாக கூறியுள்ளார்.

சஜித்துக்கும் ரணிலுக்கும் இடையில் மட்டுமே பேச்சுவார்த்தை நடைபெறவேண்டும் என சஜித் தரப்பு பேச்சுவார்த்தைக்கு நேரத்தை கேட்டிருந்த போதும், , அமைச்சர்களான கபீர் ஹாசிம், மலிக் சமரவிக்ரம, ராஜித்த சேனாரத்ன மற்றும் ரஞ்சித் மத்துமபண்டார ஆகியோரும் இந்த பேச்சுவார்த்தையில் பங்கேற்றிருந்தனர்.

நல்லமுறையில் பேச்சுவார்த்தை இடம்பெற்ற போதும் , எவ்விதமான தீர்மானமும் எட்டப்படவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.

அத்துடன் அதுதொடர்பிலான யோசனைகள் எதனையும் சஜித் தரப்பினர், 10க்கு10 பேச்சில் முன்வைக்கவில்லை எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

எனினும், ஐ. தே. கட்சியின் செயற்குழுவினால், ஜனாதிபதி வேட்பாளராக தன்னை ஏற்றுக்கொள்ளவில்லை என்றால், அரசியலிருந்து ஓய்வு பெறுவதற்கு தான் தயார் என, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளதாக கூறப்படுகின்றது.

சஜித் பிரேமதாஸ ஜனாதிபதியானால், ரணில் விக்கிரமசிங்கவே பிரதமராக தெரிவு செய்யப்படுவார் எனினும் அந்த யோசனையை பிரதமர் விரும்பவில்லை என்றும் அறியமுடிகின்றது.

இந்நிலையில், ரணிலை பிரதமராக்குவோம் என சஜித் தரப்பினரால், வெளிப்படையாக இதுவரையிலும் அறிவிப்பு எதுவும் வெளியிடப்படவில்லை என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.