வட்டுக்கோட்டையில் அரங்கேறிய கொடுமை-விபத்தில் சிக்கிய மனைவி, கணவனை அடித்துதைத்த பொலிஸாா்!

வட்டுக்கேட்டை- சங்கரத்தை பகுதியில் சேலை தலைப்பு மோட்டாா் சைக்கிள் சில்லுக்குள் சிக்கி மனைவி படுகாயமடைந்த நிலையில், கணவனை நடு வீதியில் பொதுமக்கள் முன்னிலையில் பொலிஸாா் மிருக த்தனமாக தாக்கியுள்ளனர்.

குறித்த சம்பவம் இன்று பிற்பகல் இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடா்பில் தெரியவ்ருகையில்,

வட்டுக்கோட்டையிலிருந்து மனைவியை ஏற்றிக்கொண்டு சித்தன்கேணிக்கு இளம் குடும்பத்தலைவர் ஒருவர் பயணித்துள்ளார்.

இதன்போது சங்கரத்தைப் பகுதியில் மோட்டார் சைக்கிள் சில்லுக்குள் சேலை சிக்குண்டு மனைவி விபத்துக்குள்ளாகியதை அடுத்து, படுகாயமடைந்த மனைவியை அம்புலன்ஸ் வண்டியில் தெல்லிப்பளை அனுப்பிவைத்த குடும்பத்தலைவர் தானும் வைத்தியசாலைக்குச் செல்ல முற்பட்டுள்ளார்.

இதன்போது வீதியில் பயணித்த பொலிஸ் உத்தியோகத்தர் இருவர் விபத்துச் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை நடத்துவதாகத் தெரிவித்துள்ளதோடு, குடும்பத்தலைவரின் சாரதி அனுமதிப்பத்திரத்தை

பொலிஸ் நிலையம் எடுத்துச் செல்லத் தருமாறு கேட்டுள்ளனர்.

இந்நிலையில் தான் மனைவியைப் பார்க்க வைத்தியசாலைக்குச் செல்ல வேண்டும் என்பதால், சாரதி அனுமதிப்பத்திரத்தை வைத்திருக்க குறித்த குடும்பஸ்தர் அனுமதிக்குமாறு கேட்டுள்ளார்.

எனினும் அதற்கு மறுத்த பொலிஸார் குடும்பத்தலைவருக்கு விலங்கிட்டு அவரை கடுமையாகத் தாக்கியுள்ளனர்.

பொலிஸாரின் இந்தச் செயலைக் கண்ட அங்கிருந்தவர்கள் , குடும்பத்தலைவரைத் தாக்கவேண்டாம் என கூறி, அவரிடமிருந்த சாரதி அனுமதிப்பத்திரத்தை வாங்கிப் பொலிஸாரிடம் வழங்கியுள்ளனர்.

இதனையடுத்து குடும்பத்தலைவரின் சாரதி அனுமதிப்பத்திரத்தையும் மோட்டார் சைக்கிளையும் பொலிஸ் நிலையத்துக்கு பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவரும் எடுத்துச் சென்றுள்ளனர்.

இதேவேளை வட்டுக்கோட்டையைச் சேர்ந்த தமிழ் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரால் வீடு கொடுத்து தங்க வைக்கப்பட்டுள்ள சிங்கள பொலிஸ் உத்தியோகத்தரே இந்த அடாவடியில் ஈடுபட்டதாக சம்பவ இடத்தில் இருந்தவர்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.