யாழ் இணுவில் பகுதியில் நள்ளிரவில் வீடொன்றினுள் புகுந்த இராணுவம்! குடும்பத்தினர் வைத்தியசாலையில் அனுமதி

யாழ்ப்பாணம் இணுவில் பகுதியில் வீட்டிலிருந்தவர்களை தாக்கி கொள்ளையிட்ட சந்தேகத்தில் இராணுவச் சிப்பாய் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக சுன்னாகம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இணுவில் பகுதியிலுள்ள வீடொன்றில் நள்ளிரவு 12.30 மணியளவில் சத்தம் கேட்டமையினால் வீட்டின் குடும்பத் தலைவர் கதவை திறந்து வெளியே சென்றுள்ளார்.

அப்போது முகத்தை முழுமையாக மூடியவாறு கூரிய ஆயுதங்களுடன் நின்ற ஐந்து பேர் கொண்ட கும்பல் குடும்பத் தலைவரை கடுமையாக தாக்கிவிட்டு வீட்டுக்குள் நுழைந்துள்ளனர்.

அங்கு அவரது மனைவியையும் பிள்ளைகளையும் தாக்கியதுடன் வீட்டியிலிருந்த மடிக்கணினி கையடக்கத்தொலைபேசிகள் என்பவற்றுடன் வீட்டிலிருந்த பெண்மணி அணிந்திருந்த தோட்டினையும் கொள்ளையிட்டு சென்றுள்ளனர்.

இதையடுத்து தாக்குதலில் படுகாயமடைந்தவர்கள் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் சம்பவம் தொடர்பில் சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது.

சம்வம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் புன்னாலைக் கட்டுவன் பகுதியைச் சேர்ந்த ஒருவரை சந்தேகத்தில் கைதுசெய்தனர்.

அத்துடன் கைது செய்யப்பட்ட நபரிடமிருந்து வீட்டில் திருடப்பட்டதாகக் கூறப்படும் மடிக்கணினியையும் அவரிடமிருந்து மீட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும் கைது செய்யப்பட்ட நபரின் வாக்குமூலத்தின் அடிப்படையில் ஏனைய சந்தேக நபர்களையும் கைது செய்யும் நடவடிக்கையில் சுன்னாகம் பொலிஸார் ஈடுபட்டுள்ளதாக தெரிவிகபட்டுள்ளது.

இதேவேளை யாழ் குடாநாட்டில் இராணுவத்தினர் வழிபறிக்கொள்ளைகளில் ஈடுபட்டுவருவதாக அணமையில் செய்திகள் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.