தமிழர் பகுதியில் புதைந்த நிலையில் மீட்கப்பட்ட விடுதலைப்புலிகளின் கொடிகள் மற்றும் சீருடைகள்!

முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் கிழக்கு பகுதியில் இருந்து இன்று (16.09.19 ) பொதிசெய்யப்பட்டு நிலத்தில் புதைத்த நிலையில் விடுதலைப்புலிகளின் கொடிகள் மற்றும் சீரூடைகள் என்பன மீட்கப்பட்டுள்ளன.

இச்சம்பவம் பற்றி தெரியவருகையில்… முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் பகுதியில் தனியார் ஒருவர் தனது காணியினை கனரக இயந்திரம் கொண்டு துப்பரவு செய்தவேளை நிலத்தில் புதைந்து கிடந்த பை ஒன்று வெளியில் வந்துள்ளது இதனை பார்த்தபோது அதில் விடுதலைப்புலிகளின் சீருடைகள் காணப்பட்டுள்ளதை தொடர்ந்து முல்லைத்தீவு பொலிஸாருக்கு தகவல் கொடுத்துள்ளார்கள்.

இச்சம்பவத்தினை தொடர்ந்து முல்லைத்தீவு பொலிஸார் சம்பவ இடத்திற்கு சென்று குறித்த பொதியிலிருந்து விடுதலைப்புலிகளின் இரண்டு புலிக்கொடிகள் மற்றும் சீருடைகள் இரண்டும் இரண்டு தொப்பிகளையும் மீட்டுள்ளார்கள்.

இதில் சீருடை ஒன்று சிறுவர் ஒருவரின் அளவிலும் மற்றையது பெரியவர்களின் அளவிலும் காணப்பட்டுள்ளது. புலிக்கொடி ஒன்று சிறியதும் மற்றையது பெரியதுமாக காணப்பட்டுள்ளது.

இதனை மீட்ட முல்லைத்தீவு பொலிஸார் அதனை நாளை முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றில் ஒப்படைக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார்கள்.