65 இலட்சத்திற்கும் அதிகமான வாக்குகளைப் பெற்று ஜனாதிபதியாகவுள்ள சஜித்..!

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் சஜித் பிரேமதாச 65 இலட்சத்திற்கும் அதிகமான வாக்குகளைப் பெற்று வெற்றி பெறுவார் என்று இராஜாங்க அமைச்சர் அசோக் அபேசிங்க தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளர் குறித்து சர்ச்சை ஏற்படுமானால் செயற்குழுவில் வாக்கெடுப்பு மூலம் இறுதித் தீர்மானம் எடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பு, கோட்டை தனியார் பேருந்து நிலையத்தில் இன்றையதினம் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் அவர் தெரிவிக்கையில்,

ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக அமைச்சர் சஜித் பிரேமதாசவே நியமிக்கப்படுவார்.

ஏனெனில் அவரே இது வரையில் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடப்போவதாக கட்சித்தலைவரும் பிரதமருமான ரணில் விக்ரமசிங்கவிற்கு கடிதத்தின் ஊடாக தெரியப்படுத்தியுள்ளார்.

அதேவேளை, எமது கட்சியில் இதுவரையில் வேறு எவரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடப்போவதாக உத்தியோக பூர்வமாக அறிவிக்கவில்லை.

அவ்வாறு வேறு எவராயினும் போட்டியிட முன்வருவார்களாயின் எதிர்வரும் வாரங்களுக்குள் தெரியப்படுத்த வேண்டும். ஏனெனில் வேட்புமனு கோரல் இடம்பெறவுள்ளது.

ஆகவே எவராயினும் போட்டியிடவுள்ளார்கள் ஆயின் கட்சித்தலைவருக்கு தெரியப்படுத்துவர். வாக்கெடுப்பின் ஊடாக ஜனாதிபதி வேட்பாளர் தெரிவு செய்யப்படுவார்.

ஆயினும் இது வரையில் எவரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடல் தொடர்பில் உத்தியோகபூர்வமாக அறிவிக்கவில்லை என்பதால் சஜித் பிரேமதாசவே ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்படுவார் என எதிர்பார்க்கின்றேன் என குறிப்பிட்டுள்ளார்.