முள்ளிவாய்க்கால் போர் அவல பகுதிக்குள் வாழ்ந்த முல்லைத்தீவு- மல்லாவியை சோ்ந்த பல்கலைக் கழக மாணவன் ஒருவன் செயற்கை கை ஒன்றினை உருவாக்கி சாதனை புரிந்துள்ளார்.
மல்லாவியினை சேர்ந்த கணபதிப்பிள்ளை பத்மநாதன் அவர்களின் மகனான துசாபன் என்ற பல்கலைக்கழக மாணவனே இம் முயற்சியில் வெற்றியும் கண்டுள்ளார்.
2009 சனவரி 20 ஆம் திகதி சுதந்திரபுரம் சந்தியில் அமைந்துள்ள பிள்ளையார்கோவில் அருகாமையில் இடம்பெற்ற இலங்கை படையினரின் எறிகணைத்தாக்குதலில் துசாபனின் தந்தையார் பத்மநாதன் உட்பட ஆறு பேர் படுகாயமடைந்தனர். இதில் இருவர் கொல்லப்பட்டனர்.
மே 16 2009 வரை முள்ளிவாய்க்கால் பகுதியில் வசித்து வந்திருந்த துசாபன், போர்க்காலப்பகுதியில் கைகளை இழந்தவர்களுக்காக செயற்கை கைகளை உருவாக்கும் முயற்சியில் தனது நேரத்தினை கடந்த ஆண்டுகளில் செலவிட்டுள்ளார்.
சில மாதங்களுக்கு முன்னர் அதில் வெற்றியும் கண்டுள்ளார். தனது கல்வி முறுவுறும் நேரத்தில் கைகளை இழந்தவர்களுக்கு சென்றடையும் வகையில் செய்து கொடுக்க இருப்பதாகவும் மிகக்குறைந்த விலையில் எவ்வாறு செய்ய முடியும் என்று தற்பொழுது ஆராய்வதாகவும் தெரிவித்துள்ளார்.