பெண்ணை துஷ்பிரயோகம் செய்த வைத்தியர் நீதிமன்றில் அடாவடி! நீதிபதி இளஞ்செழியனின் கடும் உத்தரவு

தனது மருத்துவ சிகிச்சை நிதியத்திற்கு வந்த நோயாளிப் பெண்ணை சிகிச்சை நிதியத்தில் வைத்து பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியுள்ளதாக, ஆயுர்வேத வைத்தியர் ஒருவருக்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இது தொடர்பான விசாரணை திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் முன்னிலையில் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் பாதிக்கப்பட்ட பெண் நேற்றைய தினம் நீதிமன்றில் சாட்சியம் அளித்துள்ளார்.

சாட்சியம் வழங்கிவிட்டு குறித்த பெண் நீதிமன்றிற்கு வெளியே செல்லும் போது எதிரியான ஆயுர்வேத வைத்தியரினால் நீதிமன்ற வளாகத்திற்குள் வைத்து அவர் அச்சுறுத்தப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

இதன்போது மேல் நீதிமன்றத்தின் மூன்றாம் மாடியில் அதிக சப்தமாக காணப்பட்டுள்ள நிலையில், சப்தமிட்டவர்களை அழைத்து வருமாறு பொலிஸாருக்கு நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இந்த சந்தர்ப்பத்தில் எதிரியான வைத்தியரும், பாதிக்கப்பட்ட பெண்மணியும் நீதிபதி முன் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளனர்.

அப்போது பாதிக்கப்பட்ட பெண் குறிப்பிடுகையில், எதிரியான வைத்தியர் தன்னை அச்சுறுத்தி எச்சரித்ததாக நீதிபதியிடம் தெரிவித்துள்ளார்.

பாதிக்கப்பட்ட நபர்கள் சாட்சிகள் சட்டத்தின் கீழ் சாட்சியை மிரட்டியதன் காரணமாக எதிரியான வைத்தியருக்கு நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட பிணை கட்டளையை நீதிபதி இளஞ்செழியன் ரத்து செய்து எதிரியை வழக்கு விசாரணை முடியும் வரை விளக்கமறியலில் வைக்குமாறு கடுமையான உத்தரவு பிறப்பித்துள்ளார்.

மேலும் பாதிக்கப்பட்ட அப்பெண்மணிக்கு கந்தளாய் பொலிஸ் உத்தியோகத்தரொருவர் எதிரிக்கு எதிராக தன்னை சாட்சியம் அளிக்க வேண்டாம் எனவும், எதிரி ஒரு இலட்சம் ரூபா நட்டஈடு தருவார் அதனை பெற்று கொண்டு சமாதானமாக செல்லும் படி கூறியதாகவும் பெண்மணி முறையிட்டுள்ளார்.

அந்த பொலிஸ் உத்தியோகத்தருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு பிராந்திய பொலிஸ் அதிகாரிக்கு நீதிபதி இளஞ்செழியன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

சாட்சியை மிரட்டிய ஆயுர்வேத வைத்தியர் உடனடியாக கைது செய்யப்பட்டு மறியல்சாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

மேலும் ஆயுர்வேத வைத்தியர், அந்த பெண்ணை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய சம்பவம் நோயாளிகள் வெளியில் இருக்கும் போது இடம்பெற்றதாக சட்டமா அதிபர் திணைக்களத்தின் சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள குற்றச்சாட்டு பத்திரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடுத்தக்கது.