கடைசியாக அவள் முகத்தை பார்க்க வேண்டும்! யாழில் கதறும் தர்ஷிகாவின் பெற்றோர்

“எங்களுடைய பிள்ளையை கடைசியாக ஒரு தரம் பாரக்க வேண்டும்” என கனடாவில் வெட்டிக் கொலை செய்யப்பட்ட இலங்கை தமிழ் பெண்ணான தர்ஷிகாவின் பெற்றோர் கதறியழுகின்றனர்.

ஏழ்மையின் பிடியில் இருக்கும் தர்ஷிகாவின் குடும்பம் யாழ்ப்பாணத்தில் வசித்து வருகின்றது.

பெற்றோர், இன்னும் திருமணமாகாத இரண்டு சகோதரிகள், இரண்டு சகோதரர்கள் என்றவாறு அவர்களின் குடும்ப அமைப்பு உள்ளது.

கனடா சென்றால் ஒருவேளை தனது குடும்பத்தை கொஞ்சம் நல்ல நிலைமைக்கு கொண்டுவரலாம் என எண்ணிச் சென்ற தர்ஷிகாவின் கனவு கனவாகவே போய்விட்டது.

இந்த நிலையில் தனது மகளை இழந்த சோகம் தொடர்பில் கொட்டித் தீர்க்கிறார் தர்ஷிகாவின் தாய்,

எங்கள் மகளை ஒரு முறை கடைசியாக பார்க்க வேண்டும், எங்கள் வீட்டின் விளக்கு அணைந்துவிட்டது.

குடும்பத்துடன் சந்தோஷமாக வாழ வேண்டும் என அனுப்பி வைத்த பெண்ணை ஈவிரக்கமின்றி கொன்று விட்டானே.

எனது பிள்ளையை இந்த நிலைக்கு ஆளாக்கியவன் கடைசிவரை சிறையிலிருந்து வெளியே வரக்கூடாது என கூறியுள்ளார்.

அத்துடன், தனது மகளை கொடுமைப்படுத்தியதற்காக கனடாவில் சசிகரன் தனபாலசிங்கம் இரு தடவை கைது செய்யப்பட்டுள்ளதாக தர்ஷிகாவின் தந்தை கண்ணீர் மல்க தெரிவிக்கின்றார்.

தனது மகளின் சடலத்தை தாய் நாட்டில், தமது ஊருக்கு கொண்டு வந்து கடைசியாக அவளது முகத்தை பாரத்து இறுதிக்கிரியைகளை செய்ய வேண்டும் என கண்ணீருக்கு நடுவில் கூறியுள்ளார்.

மேலும், கனடா – ரொரன்றோவில் வைத்து தர்ஷிகா அவரது முன்னாள் கணவர் சசிகரன் தனபாலசிங்கத்தால் நடுவீதியில் வைத்து கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பான விசாரணைகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.