வவுனியா பாடசாலை ஒன்றில் தமிழ் சிறுமி மீது பலாத்கார முயற்சி! தந்தை வெளியிடும் பல தகவல்கள்

வவுனியா நெடுங்கேணியில் 8 வயதுடைய சிறுமி ஒருவரை பாலியல் பலாத்காரம் செய்ய முற்பட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த சம்பவம் இன்றையதினம் இடம்பெற்றுள்ளது.

வவுனியா, நெடுங்கேணி மகா வித்தியாலயத்தில் தரம் மூன்றில் கல்வி பயிலும் மாணவி ஒருவர் மீது நேற்றையதினம் இவ்வாறு பாலியல் பலாத்கார முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

குறித்த பாடசாலையில் புதிதாக கட்டப்பட்டு வரும் கட்டிட நிர்மானப் பணிகளை குத்தகைக்கு எடுத்து செய்து வரும் குழுவினரைச் சேர்ந்த இரு இளைஞர்கள் இவ்வாறான செயற்பாடுகளில் நடந்து கொண்டுள்ளதாக குறித்த மாணவியின் தந்தை தெரிவித்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

இன்றையதினம் காலை விசேட பயிற்சி வகுப்பு இருந்ததன் காரணத்தினால் என்னுடைய மகளை நான் பாடசாலைக்கு அழைத்து சென்று விட்டு வந்தேன்.

வரும்போது மகளின் வகுப்பாசிரியரிடம் வகுப்பு முடியும் போது எனக்கு தொலைபேசியில் அழைத்து கூறுங்கள் நான் மீண்டும் வந்து எனது மகளை அழைத்துச் செல்கின்றேன் என தெரிவித்திருந்தேன்.

எனினும், ஆசிரியர் அதனை செய்ய தவறிவிட்டார். இதனால் வழமையைவிட வெகு சீக்கிரமாக வகுப்பு முடிவடைந்த நிலையில் எனது மகள் தனியே பாடசாலை வளாகத்திற்குள் நின்றிருக்கின்றாள்.

இதனை அவதானித்த, அங்கு கட்டட வேலையில் ஈடுபட்டிந்த இரு இளைஞர்கள் எனது மகளை துஷ்பிரயோகத்திற்குட்படுத்த முயற்சி செய்துள்ளனர்.

எனது மகள் இதனை உணர்ந்து அவர்களிடம் இருந்து தப்பி எனது கடையை நோக்கி ஓடி வந்து என்னிடம் நடந்தவற்றை தெரிவித்தார்.

நான் அவசர பொலிஸ் இலக்கத்துடன் தொடர்புகொண்டு விடயத்தை அறிவித்தவுடன் பொலிஸார் அவர்களை கைது செய்துள்ளனர்.

அன்று வித்தியாவிற்கு நடந்த கொடூரம் இன்று என் மகளுக்கு நடந்திருந்தால் என்ன செய்ய முடியும். எங்கள் வீட்டில் நடக்கவில்லை என்று பார்ப்பவர்கள் இதனை கடந்து போனால் நாளை உங்கள் வீட்டில் இப்படி ஒன்று நடந்தாலும் மற்றவர் வேடிக்கை தான் பார்ப்பார்கள் என குறிப்பிட்டுள்ளார்.