தேசிய வீடமைப்பு அதிகார சபையில் 2300 ஊழியர்களுக்கு நியமனம் வழங்கியமை சட்டத்துக்கு முரணானதாக தான் கருதவில்லை என்று வீடமைப்பு, நிர்மாணத்துறை மற்றும் கலாசார அமைச்சர் சஜித் பிரேமதாச சாட்சியமளித்தார்.
திறைசேரியின் முகாமைத்துவ சேவை திணைக்களத்தின் அனுமதியின்றி தேசிய வீடமைப்பு அதிகார சபைக்காக முறைசாரா நியமனங்களை வழங்கியுள்ளதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் இடம்பெறும் விசாரணைகளுக்கு அமைய இவ்வாறு அமைச்சர் சஜித் பிரேமதாச இன்று ஜனாதிபதி விசாரணை ஆணைக் குழுவில் இவ்வாறு சாட்சியமளித்தார்.
கடந்த 20 ஆம் திகதி அமைச்சர் சஜித் பிரேமதாசவுக்கு ஜனாதிபதி விசாரணை ஆணைக் குழுவின் பொலிஸ் பிரிவில் வாக்கு மூலம் வழங்க உத்தரவிடப்பட்டிருந்தது. எனினும் அன்றைய தினம் ஆணைக் குழுவில் ஆஜராகிய அவரது சட்டத்தரனி குணரத்ன வன்னிநாயக்க, இன்று 23 ஆம் திகதி ஆணைக் குழுவின் பொலிஸ் பிரிவிலும், ஆணைக் குழுவிலும் அமைச்சர் சஜித் ஆஜராவதாக அறிவித்திருந்தார்.
இந் நிலையில் இன்று காலை 9.40 மணியளவில் ஜனாதிபதி ஆணைக் குழுவின் பொலிஸ் பிரிவில் ஆஜரான அமைச்சர் சஜித் அங்கு சுமார் 4 மணி நேரம் வாக்கு மூலமளித்தார்.
அதனைத் தொடர்ந்து ஜனாதிபதி விசாரணை ஆணைக் குழு முன்னிலையில் ஆஜராகி சுமார் இரு மணி நேரம் சாட்சியம் வழங்கினார்.
தேசிய வீடமைப்பு அதிகார சபையில் 2300 ஊழியர்களுக்கு நியமனம் வழங்கியமை சட்டத்துக்கு முரணானதாக நான் கருதவில்லை. இந்த ஊழியர்களை நியமிக்கும் போது தேசிய வீடமைப்பு அதிகார சபை சரியான வழிகாட்டுதல்களைப் பின்பற்றியுள்ளது.
இவ்வாறு நியமிக்கப்பட்ட அனைவரும் வீட்டுத்திட்டங்களை நிர்வகிப்பதில் ஈடுபட்டுள்ளனர். இந்த திட்டங்களை வெற்றிபெற இந்த ஊழியர்கள் திறமையாக பணியாற்றியுள்ளனர் என இதன்போது அமைச்சர் சஜித் பிரேமதாச சாட்சியமளித்தார்.






