கைப்பற்றப்பட்ட விடுதலைப்புலிகளின் தங்கம் – சுங்க உயரதிகாரிகள் இருவர் கைது!

கைப்பற்றப்பட்ட விடுதலைப்புலிகளின் தங்கத்தை முறையற்ற விதமாக கடற்படைக்கு விடுவித்த குற்றச்சாட்டில் முன்னாள் சுங்க உயரதிகாரிகள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த அதிகாரிகள் நிதிக் குற்ற புலனாய்வு பிரிவு அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அந்தவகையில் முன்னாள் சுங்க இயக்குனர் நாயகம் ஜகத் பிரேமலால் விஜவீர, மற்றும் ஓய்வு பெற்ற கூடுதல் சுங்க இயக்குநர் நாயகம் தரக செனவிரத்ன ஆகியோரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

சட்டமா அதிபர் திணைக்களத்தினால், தண்டனைச் சட்டம் மற்றும் பொது சொத்துச் சட்டத்தின் கீழ் குற்றச்சாட்டுகளை பதிவு செய்யுமாறு எஃப்.சி.ஐ.டி ஐ அண்மையில் அறிவுறுத்தியது.

கடற்படையின் போர் நினைவு சிலை அமைப்பதற்காக பணிப்பாளர் நாயகம் சட்டவிரோதமாக தங்கத்தை கடற்படைக்கு விடுவித்ததாக சட்டமா அதிபர் குறிப்பிட்டிருந்ததோடு உதவிப்பணிப்பாளர் அதற்கு உடந்தையாக இருந்ததாகவும் குற்றம் சுமத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.