தமிழ் தேசிய கூட்டமைப்பின் முடிவால் பெரும் கலக்கத்தில் சஜித்!

ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவுக்கு ஆதரவு வழங்குவதில் சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

சஜித் பிரேமதாஸ தேர்தல் நடவடிக்கையை முன்னெடுக்கும் முறை மற்றும் தேர்தல் கொள்ளை தொடர்பில் ஆராய்ந்த பின்னர் ஆதரவு வழங்குவதா இல்லையா என்பது தொடர்பில் தீர்மானம் மேற்கொள்ளப்படும் என தமிழ் தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

அமைச்சர் சஜித் பிரேமதாஸ மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு இடையில் மூன்று சுற்று கலந்துரையாடல்கள், கொழும்பு மற்றும் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளன.

இந்தக் கலந்துரையாடல்களின் போது தேசிய பிரச்சினை தொடர்பில் அமைச்சர் சஜித்தின் தீர்வு போதுமானதாக இல்லை. இதனால் ஆதரவு வழங்க முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பு, ஐக்கிய தேசிய கட்சியின் தலைமையிடம் தெரிவித்துள்ளதாக தெரிய வருகிறது.

அண்மையில் முல்லைத்தீவில் பௌத்த துறவிகளின் செயற்பாடு காரணமாக, சிங்கள தலைவருக்கு வாக்களிக்குமாறு தமிழ் மக்களிடம் கேட்க முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளதாக கூட்டமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

நிறைவேற்று ஜனாதிபதி முறையை ஒழித்தல், புதிய அரசியலமைப்பு தயாரித்தல், தேசிய பிரச்சினைக்கு உடனடி தீர்வு வழங்குவதல் போன்ற கோரிக்கைகளை நிறைவேற்றுமாறு தமிழ் தேசிய கூட்டமைப்பு, ஜனாதிபதி வேட்பாளரான சஜித் பிரேமதாஸவிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஆதரவு இன்றி எந்தவொரு ஜனாதிபதி வேட்பாளரும் வெற்றி பெற முடியாது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் கூட்டமைப்பின் ஆதரவு கிடைக்காத பட்சத்தில் பெரும் நெருக்கடியை ஏற்படுத்தும் என்ற அச்சத்தில் சஜித் பிரேமதாஸ உள்ளதாக கட்சித் தகவல்கள் தெரிவிக்கின்றன.