வவுனியா, ஓமந்தை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாதர் பனிக்கர் மகிளங்குளம் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞன் உயிரிழந்துள்ளார்.
இவ் விபத்து நேற்று (சனிக்கிழமை) இரவு இடம்பெற்றுள்ளதாக ஓமந்தை பொலிஸார் தெரிவித்தனர். பாலமோட்டை பகுதியைச் சேர்ந்த குறித்த இளைஞர், நேற்று இரவு 11 மணியளவில் மோட்டார் சைக்கிளில் இறம்பைகுளம் சந்தியிலிருந்து, தனது வீடு நோக்கி பயணித்துள்ளார். இந்நிலையில், அதிக வேகம் காரணமாக கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் வீதியின் அருகில் இருந்த மதகுடன் மோதியது.

இதனால் தூக்கி வீசப்பட்ட இளைஞன் படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லும் வழியில் உயிரிழந்தார்.
விபத்தில் பாலமோட்டை பகுதியை சேர்ந்த சசிகுமார் பிரிந்தன் (வயது-20) என்றே இளைஞரே உயிரிழந்தார்.
சடலம் உடற்கூற்று பரிசோதனைக்காக வவுனியா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் விபத்து தொடர்பாக ஓமந்தை பொலிஸார் விசாரணையை முன்னெடுத்துள்ளனர்.






