யாழில் பட்டப்பகலில் நடந்த அசம்பாவிதம்: கண்டுகொள்ளாத பொலிஸ்; பாதிக்கப்பட்டவர்கள் எடுத்த நடவடிக்கை!

யாழ்ப்பாணம் – கொக்குவில் பகுதியில் வீடொன்றிற்குள் புகுந்த தாக்கியவர்கள் தொடர்பில் கோப்பாய் பொலிஸார் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனவும், தமக்கான நீதியைப் பெற்றுத் தருமாறும் கோரியும் பாதிக்கப்பட்டவர்கள் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ் பிராந்திய அலுவலகத்தில் முறைப்பாட்டை பதிவு செய்துள்ளனர்.

அண்மையில் கொக்குவில் கிழக்கு பகுதியிலுள்ள வீடொன்றுக்குள் பட்டப்பகல் வேளையில் புகுந்த இளைஞரொருவர் வீட்டிலிருந்த வயோதிப தாய் மற்றும் தந்தை ஆகியோரைத் தாக்கியுள்ளார்.

இதில் பலத்த காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன் சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்டவர்கள் கோப்பாய் பொலிஸ் நிலையத்திலும் முறைப்பாட்டை பதிவு செய்தனர்.

அந்த வீட்டின் மகன் மற்றும் மகள் வேலைக்குச் சென்றதால் சம்பவம் நடைபெறுகின்ற போது அவர்கள் அங்கு இருக்கவில்லை.

ஆனாலும் அவர்கள் மாலையில் வந்திருந்த போது மீண்டும் அதே வீட்டிற்கு வந்தவர்கள் வீட்டிலிருந்த மோட்டார் சைக்கிளையும் தீ வைத்து எரித்துள்ளனர்.

இந்த நிலையல் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்பதால் அந்த வீட்டில் வசிப்பதற்கு அச்சம் காரணமாக வேறு இடத்திற்குச் சென்று தங்கியுள்ளனர்.

இந்தச் சம்பவத்திற்கு உரிய நடவடிக்கை எடுத்து தமக்கான நீதியை பெற்றுத் தருவதுடன் தாம் மீண்டும் தமது சொந்த வீட்டிற்கு வருவதற்கான பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறும் பாதிக்கப்பட்டவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதற்கமையவே யாழிலுள்ள மனித உரிமைகள் ஆணைக்குழு அலுவலகத்தில் இன்று முறைப்பாட்டை பதிவு செய்தள்ளனர்.

அத்தோடு தேசிய பொலிஸ் ஆணைக்குழுவிலும் கோப்பாய் பொலிஸாருக்கு எதிராக முறைப்பாடு செய்துள்ளனர்.

இதே வேளை வீட்டில் இடம்பெற்ற சம்வம் தொடர்பான சீசீரீவி கமரா காணொளியையும் அவர்கள் வெளியிட்டுள்ளமை குறிப்படத்தக்கது.