முல்லைத்தீவு குடிமகன் நாசாவில் உள்ளது ஞானசார தேரரிற்கு தெரியாதா? ஆலய நிர்வாகம் ஆதங்கம்

முல்லைத்தீவு மக்கள் தொடர்பில் ஞானசார தேரர் தெரிவித்துள்ள கருத்து வன்மையாக கண்டிக்கத்தக்கது என தமிழர் மரபுரிமை இயக்கத்தின் இணைத்தலைவர் நவநீதன் தெரிவித்துள்ளார்.

லங்காசிறி செய்தி சேவைக்கு வழங்கிய விசேட செவ்வியிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

முல்லைத்தீவு – பழைய செம்மலை நீராவியடிப் பிள்ளையார் ஆலயத்தை ஆக்கிரமித்து விகாரை அமைத்த, கொலம்பகே மேதாலங்கார தேரர் அண்மையில் புற்றுநோயால் உயிரிழந்தார்.

இந்நிலையில், உயிரிழந்த தேரரின் உடலை ஆலய வளாகப் பகுதியில் தகனம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்த நிலையில், இதற்கு தடைவிதிக்கக் கோரி, ஆலய நிர்வாகம் சார்பில் முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது.

இது குறித்த வழக்கு முல்லைத்தீவு நீதிவான் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டது. விசாரணைகளின் பின்னர், ஆலய வளாகத்தில், பௌத்த பிக்குவின் உடலை எரிக்கவோ, புதைக்கவோ கூடாது என்று நீதிவான் உத்தரவிட்டார்.

எனினும், நீதிமன்றக் கட்டளை எழுத்து மூலம் வழங்கப்படுவதற்கு முன்னர் பௌத்த பிக்குகளும், சிங்கள மக்களும் இணைந்து, பிக்குவின் சடலத்தை ஆலய வளாகப் பகுதியில் தகனம் செய்தனர். இவ்விடயம் தொடர்பான சர்ச்சைகள் நீடித்துவருகின்றது.

இந்நிலையில், அண்மையில் கருத்து வெளியிட்டிருந்த ஞானசார தேரர், முல்லைத்தீவு மக்கள் சில அரசியல் வாதிகளினாலும், சில பங்கு தந்தையர்களின் கருத்துகளுக்கு செவிசாய்த்து, பௌத்த மதத்திற்கு எதிராக செயற்படுவதாக கூறியிருந்தார்.