எனது திட்டத்தை சீர்குலைப்பதற்கான முயற்சியே குண்டுத் தாக்குதல்கள் – ஜனாதிபதி

கடந்த ஏப்ரல் மாதம் 21ஆம் திகதி இடம்பெற்ற துன்பியல் சம்பவம் நாட்டுக்கான போதைப்பொருள் எதிர்ப்பு நிகழ்ச்சித் திட்டத்தை சீர்குலைப்பதற்காக எடுக்கப்பட்ட முயற்சி என்றே தான் நம்புவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

கொழும்பு- நாலந்தா கல்லூரியில் நேற்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். மைத்திரிபால சிறிசேன மேலும் தெரிவித்துள்ளதாவது, “போதைப்பொருள் கடத்தலின் காரணமாக நாட்டுக்கு ஏற்படும் பாரிய அழிவை தவிர்ப்பதற்காக எனது அரசியல் வாழ்க்கையில் தொடர்ச்சியாக தலைமைத்துவத்தை வழங்கினேன்.

போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு எதிராக மரண தண்டனையை வழங்குவதற்கும் ஜனாதிபதி என்ற வகையில் நான் கைச்சாத்திட்டபோதும் அரசியல் பேதங்களின்றி பொறுப்புக்கூற வேண்டியவர்கள் அதற்கெதிராக செயற்பட்டனர்.

இதன் காரணத்தினால் அந்த செயற்திட்டத்தை வெற்றிபெறச் செய்ய முடியவில்லை. என்றாலும் எனது அர்ப்பணிப்பின் பெறுபேறாக கடந்த சில வருடங்களாக போதைப்பொருள் ஒழிப்பில் வெற்றிகரமான பல பெறுபேறுகள் நாட்டுக்கு கிடைக்கப்பெற்றுள்ளன.

யார் எதைக் கூறினாலும் கடந்த ஏப்ரல் 21ஆம் திகதி இடம்பெற்ற துன்பியல் சம்பவம் நாட்டுக்கான போதைப்பொருள் எதிர்ப்பு நிகழ்ச்சித்திட்டத்தை சீர்குழைப்பதற்காக எடுக்கப்பட்ட முயற்சி என்றே நான் நம்புகிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.