வெளிநாட்டில் கணவனுடன் வாழ்ந்து வந்த பெண்ணுக்கு நடந்தது என்ன? பெற்றோர் வேதனையுடன் சொன்ன தகவல்

இந்தியாவைச் சேர்ந்த பெண் ஒருவர் அமெரிக்காவில் தன்னுடைய வீட்டில் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம், கொலையா? தற்கொலையா? என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஹைதராபாத்தைச் சேர்ந்தவர் கஜம் வனிதா(38). இவர் தன்னுடைய கணவர் ரசகொண்டா சிவக்குமார்(40) உடன் அமெரிக்காவின் வடக்கு கரோலினாவில் உள்ள வீட்டில் வசித்து வந்தார்.

சிவக்குமார் அங்கு சாப்ட்வேர் இஞ்ஜினியராக வேலை செய்து வருகிறார்.

இந்நிலையில், அமெரிக்காவில் உள்ள தன்னுடைய வீட்டில் வனிதா சந்தேகத்திற்கிடமான வகையில் உயிரிழந்தார். வனிதா உயிரிழந்த தகவல் உறவினர்கள் மூலமாக அவரது பெற்றோருக்கு தெரியவந்ததால், மகளின் மரணம் குறித்து அவர்கள் காவல்நிலையத்தில் புகார் ஒன்று அளித்துள்ளனர்.

அதில், தங்கள் மகள் கடந்த ஜூன் மாதம் அமெரிக்காவிற்கு கணவருடன் சென்றார். அவருக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றன. அமெரிக்கா சென்றது முதல் அவர் எங்களை தொடர்பு கொண்டு பேசவில்லை.

தன்னுடைய மகள் அவரது கணவர் மற்றும் மாமனார், மாமியாரின் கொடுமை தாங்க முடியாமல் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம். வனிதாவின் உடலை அமெரிக்காவில் இருந்து இந்தியாவிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும். உடல் இங்கு வந்தபிறகு தான் எங்களால் எதனையும் உறுதியாக சொல்ல முடியும் என்று வேதனையுடன் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும் வனிதாவின் மரணம் தொடர்பாக அவரது கணவர் சிவக்குமாரிடம் காவலில் வைத்து அமெரிக்க பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.