“மஹிந்தவை வீழ்த்திய எங்களுக்கு கோட்டாவை வீழ்த்துவது பெரிய விடயமல்ல” – லக்ஷ்மன் கிரியெல்ல

மஹிந்த ராஜபக்ஷவையே வீழ்த்திய எமக்கு, இன்று கோட்டாபய ராஜபக்ஷவை தோற்கடிப்பது ஒன்றும் பெரிய விடயமல்ல என்று அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.

கண்டியில் இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், “கடந்த சில நாட்களுக்கு முன்னர், ஊகடங்களுக்கு நான் ஒரு கருத்தை கூறியிருந்தேன். அதாவது, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, அமைச்சர் சஜித் பிரேமதாஸவுக்கு இடையிலான முரண்பாடுகள் தந்தைக்கும் மகனுக்கும் உள்ள முரண்பாடுகளைப் போன்றதாகும் என்றும், இவை விரைவில் தீர்க்கப்படும் என்றும் தெரிவித்திருந்தேன்.இதுதான் இறுதியில் நடந்தது.

பலரும் எமது கட்சி பிளவடையும் என்றும் இதனால், வெற்றிவாய்பை தாங்கள் பெற்றுக்கொள்ளலாம் என்றும் சிலர் கருதினார்கள். ஆனால், இறுதியில் எமது தலைவர்கள் ஒன்றிணைந்து சிறப்பானதொரு முடிவை எடுத்துள்ளார்கள்.

மைத்திரிபால சிறிசேனவை நாம் தான் ஜனாதிபதியாக நியமித்தோம். எனினும், ஐக்கிய தேசியக் கட்சிக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கும் இடையில் வித்தியாசங்கள் காணப்பட்டன.

அந்தக் கட்சியின் உறுப்பினர்களை நாம் அமைச்சரவையில் இணைத்துக்கொண்டாலும், வந்த முதல்நாளில் இருந்து எமது காலை வாறும் செயற்பாட்டைத்தான் இவர்கள் மேற்கொண்டார்கள்.

இறுதியாக பிரதமரைக்கூட அந்தப் பதவியிலிருந்து நீக்கினார்கள். எம்மை அமைச்சரவையிலிருந்து நீக்கினார்கள். ஆனால், நாம் எதற்கும் அஞ்சவில்லை. இறுதியில் அவர்களுக்கு பெரும்பான்மையைக்கூட நிருபித்துக்கொள்ள முடியாது போனது.

அன்று எமக்கென ஒரு அரசாங்கம் இல்லாத நிலையில்தான் மஹிந்த ராஜபக்ஷவை வீழ்த்தினோம். இப்படியான எமக்கு இன்று கோட்டாபய ராஜபக்ஷவை வீழ்த்துவது ஒன்றும் பெயரிய விடயமல்ல” என கூறினார்.