தமிழர் பகுதியில் கணவன் வெளிநாட்டில் பிரசவித்த சிசுவை நிலத்தில் புதைத்த தாயால் பரபரப்பு

மட்டக்களப்பு சந்திவெளி பிரதேசத்தில் குடும்பபெண் ஒருவர் தான் பிரசவித்த குழந்தையை புதைத்துவிட்டுத் தப்பிச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நேற்று இடம்பெற்ற இந்த சம்பவம் தொடர்பாக 3 பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஏறாவூர் பொலிஸ் பிரிவின் கீழ் உள்ள சந்திவெளி பத்தினி அம்மன் கோயில் வீதியைச் சேர்ந்த 27 வயதுடைய பெண்ணொருவரின் கணவர் 3 வருடங்களுக்கு மேலாக வெளிநாட்டில் தொழில் புரிந்து வருகின்றார்.

இந்த நிலையில் குறித்த பெண் தகாத முறையில் கர்ப்பமாகியுள்ளார். இதனையடுத்து கடந்த 18 நாட்களுக்கு முன்னர் கணவர் வெளிநாட்டில் இருந்து நாடு திரும்பிய நிலையில், குறித்த பெண்ணிற்கு பேய் பிடித்ததில் வயிற்றில் கட்டியிருப்பதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து சம்பவதினமான நேற்று குறித்த பெண்ணின் கணவர் தொழிலுக்கு வெளியில் சென்றுள்ள நிலையில், அந்த பெண்ணுக்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து அவருக்கு பெண்ணின் தாயார், சகோதரி ஆகிய மூவரும் இணைந்து பிரசவம் பார்த்தனர். இதன்போது அவருக்கு ஆண் குழந்தையொன்று பிறந்துள்ளது.

இதன் பின்னர் குறித்த சிசுவை துணி ஒன்றினால் சுற்றிக் கோயிலுக்கு அருகிலுள்ள வெற்றுக் காணியில் புதைத்துள்ளனர். மேலும் இதன் பின்னர் குறித்த தாய் தலைமறைவாகியுள்ளார்.

இந்நிலையில் இந்த விடயம் தொடர்பாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலையடுத்து இன்று குறித்த பெண்ணின் சகோதரி, தாயார் மற்றும் கணவனின் தாயார் ஆகியோரை சந்தேகத்தின் பேரில் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

எனினும் குறித்த பெண் தலைமறைவாகியுள்ளதாக தெரிவிக்கும் பொலிஸார், புதைக்கப்பட்ட சிசுவின் சடலத்தை தோண்டுவதற்கு நீதிமன்றத்தின் அனுமதியை கோருவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.

மேலும் இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகளை ஏறாவூர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.