விக்டோரியா நீர்த்தேக்கத்தில் சடலமாக மீட்கப்பட்ட ஆசிரியை – மரணத்தின் காரணம் இதுதான்..!

விக்டோரியா நீர்த்தேக்கத்திலிருந்து சடலமாக மீட்கப்பட்ட ஆசிரியை சந்திம நிசன்சலா ரத்னயக்கவின் இறுதிச்சடங்குகள் நேற்று இடம்பெற்றுள்ளது.

இந்நிலையில் குறித்த ஆசிரியை கொலை செய்யப்பட்டிருக்கலாமென பொலிசார் சந்தேககம் வெளியிட்டிருந்தபோதும், பிரேத பரிசோதனை முடிவுகளின் பின்னர் ஆசிரியை நீரோடைக்குள் இடறி விழுந்து, ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டிருக்கலாமென பொலிசார் கூறியுள்ளனர்.

கம்பளை கீரபனவை சேர்ந்த 27 வயதான சந்திம நிசன்சலா ரத்னயக்க கடந்த 1ம் திகதி காணாமல் போயிருந்த நிலையில் , கடந்த 7ம் திகதி மாலை அவது உடல் விக்டோரியா நீர்த்தேக்கத்திலிருந்து மீட்கப்பட்டது.

இந்த நிலையில் அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாமென்ற கோணத்தில் பொலிசார் விசாரணை நடத்தி இருந்தனர்.

இவ்வாறான நிலையில் , கண்டி பொது வைத்தியசாலையில் அவரது உடல் பிரேத பரிசோதனைக்குள்ளாக்கப்பட்ட அறிக்கையில், ஆசிரியை கொலை செய்யப்பட்டதாக குறிப்பிடப்பட்டிருக்கவில்லை.

இதையடுத்தே, ஆசிரியை நீரோடையில் வழுக்கி விழுந்திருக்கலாமென்ற சந்தேகத்தில் நேற்றையதினம் , ஆசிரியை காணாமல் போன பகுதியில் பொலிசாரும், தடயவியல் பொலிசாரும் ஆய்வு மேற்கொண்டனர்.

அத்துடன் ஆசிரியையின் வீட்டிற்கும், இறுதியாக சிசிரிவி கமராவில் பதிவாகிய இடத்திற்குமிடையில் பாதுகாப்பற்ற பக்க வடிகால்கள் உள்ளதாகவும் தெரிவிக்கபடுகின்றது.

குறித்த ஆபத்தான பாதையில் பக்க கால்வாயில் கொங்கிரீட் தளம் போடப்பட்டிருந்தாலும் பல இடங்களில் அது அகற்றப்பட்டு, பாதுகாப்பற்ற பாதையாக உள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இதன்காரணமாக மழை காலத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் சமயங்களில், அந்த பகுதி மக்கள் பெரும் சிரமத்தை எதிர்நோக்குவதாகவும் கூறப்படுகிறது.

இதேவேளை கடந்த 3ம் திகதி மாலை வேலையிருந்து திரும்பிய ஒரு பெண்மணி அந்த கால்வாய்க்குள் விழுந்து அடித்துச் செல்லப்பட்ட நிலையில் , பிரதேசவாசிகளால் காப்பாற்றப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் உயிரிழந்த ஆசியை நிசன்சலா, கால்வாய்க்குள் தவறி விழுந்து ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டிருக்கலாமென பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும் உயிரிழந்த ஆசிரியையின் இறுதிச்சடங்குகள் நேற்று கம்பளை பொது மயானத்தில் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.