வவுனியாவில் இடம்பெற்ற பதறவைக்கும் சம்பவம் -கடத்தப்பட்ட சுகந்தன் எரியூட்டப்பட்ட நிலையில் மீட்பு…!

கடத்தப்பட்டு காணாமல்போயிருந்த முச்சக்கர வண்டி சாரதி ஒருவா் வவுனியா கள்ளிக்குளம் பகுதியில் உள்ள பற்றை ஒன்றுக்குள் எாியூட்டப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் குறித்த சாரதி கடத்திச் செல்லப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக தடயங்களை வைத்து பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வவுனியா கள்ளிக்குளம் பகுதியிலுள்ள பற்றைக்குள்ளிலிருந்து அவர் இன்று முற்பகல் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

வவுனியா சின்னப்புதுக்குளம் பகுதியைச் சேர்ந்த 27 வயதான சுகந்தன் என்ற இளம் குடும்பஸ்தரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

கோவில்குளம் சந்தியில் நின்று முச்சக்கரவண்டி வாடகைக்குச் செலுத்தி வந்த நிலையில் நேற்று மதியம் 2 மணியளவில் வவுனியா நகருக்கு பயணித்த நிலையில் காணாமற்போயுள்ளதாக சுகந்தனின் உறவினர்களால் வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது.

இந்த நிலையில் அவர் இறுதியாக வவுனியா கள்ளிகுளம் பகுதியில் நின்றுள்ளதாக அவரது தொலைபேசி தரவுகள் (ஜிபிஎஸ்) வெளிக்காட்டியுள்ளன.

அதனடிப்படையில் முச்சக்கர வண்டி ஓட்டுனர்கள், மற்றும் பொலிஸார் முன்னெடுத்த தேடுதலின் அடிப்படையில் கள்ளிக்காடு பற்றைக் காணிக்குள்ளிலிருந்து சுகந்தன் எரியூட்டப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இதனையடுத்து சம்பவம் தொடர்பில் வவுனியா தடயவியல் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ள நிலையில் இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதேவேளை குறித்த நபரது மனைவி வெளிநாட்டில் வசித்து வருகின்ற நிலையில் அவரிற்கு ஒரு குழந்தை உள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.