அவிசாவளை – தெரணியாகல பகுதியிலுள்ள தமிழ் மாணவியொருவர் கடந்த 8ஆம் திகதி முதல் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படும் நிலையில் பெற்றோர் அச்சத்தில் உறைந்துள்ளனர்.
தெரணியாகல – இழுக்தென்ன தோட்டத்தில் வசிக்கும் 14 வயதான கிருஷ்ணாதேவி என்ற சிறுமியே காணாமல் போயுள்ளார்.
தெரணியாகல ஸ்ரீ கதிரேஷன் தமிழ் மகா வித்தியாலயத்தின் 9ஆம் தரத்தில் கல்வி பயிலும் குறித்த மாணவி, கடந்த 8ஆம் திகதி பாடசாலையில் நடைபெற்ற சரஸ்வதி பூஜைக்கு சென்றுள்ளார்.
பாடசாலையிலிருந்து பஸ்ஸின் மூலம் தனது உறவு முறை சகோதரியுடன் குறித்த சிறுமி வீட்டிற்கு வருகை தந்துள்ளார்.
உறவு முறை சகோதரி தனது வீடு வந்தவுடன், அவர் அந்த இடத்தில் நின்ற வண்ணம், குறித்த சிறுமி பாலத்தை கடக்கும் வரை பார்த்துக்கொண்டிருந்துள்ளார்.
குறித்த பகுதியிலுள்ள ஆடுபாலத்தை கடந்த சிறுமி, தனது உறவு முறை சகோதரிக்கு கை அசைத்து சென்று வருவதாக சமிக்ஞை காட்டியுள்ளார் என உறவு முறை சகோதரி பொலிஸாரிடம் கூறியுள்ளனர்.
வீட்டை சென்றடைய தாமதமான நிலையில், காணாமல் போன சிறுமியின் தாய், உறவு முறை சகோதரியின் வீட்டிற்கு சென்று விடயங்களை ஆராய்ந்துள்ளார்.
இந்த சந்தர்ப்பத்திலேயே சிறுமி காணாமல் போனமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் தெரணியாகல பொலிஸார் விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.