4 நாள்களாக காணாமற்போயிருந்த கொக்குவில் இந்துக் கல்லூரி மாணவன், இணுவில் சின்னப் பள்ளிக்கூடம் பகுதியில் இன்று முற்பகல் 10 மணியளவில் நடமாடிய வேளை பொது மக்களால் அடையாளம் காணப்பட்டு மீட்கப்பட்டுள்ளார்.
மாணவன் தற்போது சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் விசாரணைக்கு உள்படுத்தப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணம் நகரிலுள்ள தனியார் விடுதி ஒன்றில் கடந்த 4 நாள்களாகத் தங்கியிருந்தாக அவர் பொலிஸ் வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.
உடுவிலைச் சேர்ந்த 16 வயது பாடசாலை வீட்டிலிருந்து கடந்த 10ஆம் திகதி வியாழக்கிழமை முற்பகல் மருந்து எடுப்பதாகக் கூறிச் சென்றநிலையில் இரவு வரை வீடு திரும்பாததால் மறுநாள் வெள்ளிக்கிழமை தாயாரால் சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு வழங்கப்பட்டது.
உடுவில் அம்பலவாணர் வீதியைச் சேர்ந்த சுந்தரலிங்கம் ஜனுக்சன் (வயது -16) என்ற கொக்குவில் இந்துக் கல்லூரியில் பயிலும் மாணவனே இவ்வாறு காணாமற்போயிருந்தார்.
இந்த நிலையில் 4 நாள்களின் பின்னர் இன்று முற்பகல் 10 மணியளவில் இணுவில் சின்னப் பள்ளிக்கூடம் பகுதியில் மாணவன் நடமாடிய வேளை பொது மக்களால் அடையாளம் காணப்பட்டு மீட்கப்பட்டார். அவர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டார்.
பொலிஸ் விசாரணைகளுக்காக அவர் தற்போது சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
தான் கடந்த 4 நாள்களாக யாழ்ப்பாணம் நகரில் உள்ள தனியார் விடுதியில் தங்கியிருந்தாகக் குறிப்பிடும் மாணவன், யார் அழைத்துச் சென்றது அல்லது யாருடன் தங்கியிருந்தது உள்ளிட்ட மேலதிக தகவல்களைத் தெரிவிக்கிறார் இல்லை என்று பொலிஸார் தெரிவித்தனர்.