யாழ். நிதி நிறுவனத்தில் ரூபா 11 கோடி மோசடி – போலித் தங்க நகை செய்தவரும் சிக்கினார்

யாழ்ப்பாணத்தில் இயங்கும் நிதி நிறுவனம் ஒன்றில் தனிநபர் ஒருவருக்கு சுமார் 11 கோடி ரூபா அடகு முற்பணம் வழங்கி மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டு வழக்கில் சந்தேகநபர்களுக்கு கவரிங் நகைகளை தங்கம் பூசி வழங்கினார் என்ற குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டு நீதிமன்றின் உத்தரவில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் கவறிங் நகைகளுக்கு தங்கம் பூசி அவற்றை மோசடியாக அடகுவைத்து பணம் பெறுவதற்கு உதவியுள்ளார் என்று பெரும் நிதி மோசடிகள் விசாரணைப் பிரிவினர் யாழ்ப்பாணம் நீதிமன்றுக்கு அறிவித்தனர்.

யாழ்ப்பாணம் நகரில் நீண்டகாலமாக இயங்கி வரும் நிதி நிறுவனம் ஒன்றால், மாதகலைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவருக்கு சுமார் 10 கோடி ரூபா பணம் மீற்றர் வட்டிக் கணக்கில் மோசடியாக வழங்கப்பட்டது.

அதனை நிதி நிறுவனத்தின் யாழ்ப்பாணக் கிளை முகாமையாளர், அடகுப் பிரிவு உத்தியோகத்தர்கள் இணைந்து தங்க நகை அடகு மீதான முற்பணம் என கணக்குக் காட்டியுள்ளனர்.

எனினும் நிதி நிறுவனத்தின் கணக்காய்வுப் பிரிவு மேற்கொண்ட விசாரணையில் வர்த்தகருக்கு வழங்கப்பட்ட முற்பணத்துக்கு உரிய நகைகள் அடகுப் பிரிவிடம் இருக்கவில்லை. அதுதொடர்பில் கணக்காய்வுப் பிரிவால், நிதி நிறுவன முகாமைத்துவத்துக்கு அறிக்கையிடப்பட்டது.

சுமார் 6 மாதங்கள் இந்தப் பணம் தனிநபர் ஒருவருக்கு எந்தப் பொறுப்பும் பெறப்படாமல் மோசடியாக வட்டிக்கு வழங்கப்பட்டுள்ளது என்று கணக்காய்வுப் பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது. அதுதொடர்பில் உரிய பணம் மற்றும் வட்டி அடங்கலாக சுமார் 11 கோடி ரூபா பணத்தை வர்த்தகரிடமிருந்து மீள அறவீடு செய்யுமாறு யாழ்ப்பாணக் கிளை முகாமையாளருக்கு நிதி நிறுவனத்தின் முகாமைத்துவம் கால அவகாசம் வழங்கியிருந்தது.

எனினும் உரிய காலத்துக்குள் பணம் மற்றும் வட்டியை மீள அறவீடு செய்வதற்கு கிளை முகாமையாளர் தவறிவிட்டதால், அவருக்கு எதிராக கொழும்பு பெரும் நிதி மோசடிகள் பொலிஸ் விசாரணைப் பிரிவுக்கு நிதி நிறுவனத்தின் முகாமைத்துவம் முறைப்பாடு வழங்கியது.

அதனடிப்படையில் விசாரணைகளை மேற்கொண்ட பெரும் நிதி மோசடிகள் பொலிஸ் விசாரணைப் பிரிவு, யாழ்ப்பாணக் கிளை முகாமையாளரைக் கைது செய்தது.

மேலும் அடகுப் பிரிவில் பணியாற்றிய ஆண் உத்தியோகத்தர் ஒருவரும் பெண் உத்தியோகத்தர்கள் இருவர் மற்றும் வர்த்தகர் ஆகிய 4 பேரையும் பெரும் நிதி மோசடிகள் விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டனர்.

அவர்களில் பெண் உத்தியோகத்தர்கள் இருவருக்கு பிணை வழங்கிய நீதிமன்று, ஏனைய மூன்று பேரையும் தொடர்ச்சியாக விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டுள்ளது.

அவர்களில் இரண்டாவது சந்தேகநபருக்கு 3 மாதங்களின் பின்னர் நேற்று புதன்கிழமை யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்று பிணை வழங்கியது.

முதலாவது சந்தேகநபரான நிதி நிறுவனத்தின் முன்னாள் முகாமையாளர், 5ஆவது சந்தேகநபரான வர்த்தகர் ஆகியோர் வரும் ஒக்ரோபர் 30ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் இந்த வழக்கை இன்று விசாரணைக்கு எடுக்குமாறு பெரும் நிதி மோசடிகள் விசாரணைப் பிரிவு நகர்த்தல் பத்திரம் ஊடாக நீதிமன்றிடம் கோரியது.

யாழ்ப்பாணம் நீதிமன்றில் நீதிவான் ஏ.பீற்றர் போல் முன்னிலையில் வழக்கு விசாரணைக்கு வந்தது.

வழக்கில் புதிதாக சந்தேகநபர் ஒருவரை வழக்கில் இணைத்து பெரும் நிதி மோசடி விசாரணைப் பிரிவினர் மன்றில் முற்படுத்தினர்.

“சந்தேகநபர் கவரிங் நகைகளுக்கு தங்க முலாம் பூசி போலித் தங்க நகைகளாக மாற்றுவதில் வல்லவர். அதனால் சந்தேகநபர் வழக்கின் முதலாவது மற்றும் 5ஆவது சந்தேகநபர்கள் நிதி நிறுவனத்தில் மோசடி செய்வதற்கு உதவியுள்ளார்.

அதனால் விசாரணைகளைத் தொடர்வதற்கு வசதியாக சந்தேகநபரை விளக்கமறியலில் வைக்கவேண்டும்” என்று பெரும் நிதி மோசடி விசாரணைப் பிரிவினர் மன்றில் விண்ணப்பம் செய்தனர்.

விண்ணப்பத்தை ஆராய்ந்த நீதிவான் ஏ.பீற்றர் போல், சந்தேகநபரை வரும் 30ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.