பிரசவத்துக்காக அனுமதிக்கப்பட்ட நடிகை; உடனடியாக ஆம்புலன்ஸ் கிடைக்காததால் பாதிவழியில் உயிரிழந்த சோகம்!

பிரசவத்துக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் மேல் சிகிச்சைக்கு கொண்டு செல்ல ஆம்புலன்ஸ் உரிய நேரத்தில் கிடைக்காததால் நடிகை உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மராத்தி நடிகை பூஜா ஜுஞ்சர் என்பவரே இவ்வாறு பரிதாபமாக உயிரிழந்தவராவார்.

இந்த சோக சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது.,

இரண்டு மராத்திப் படங்களில் முக்கிய வேடங்களில் நடித்தவர் பூஜா ஜுஞ்சர். அவர் கருவுற்ற நிலையில் திரையுலகில் இருந்து விலகி மகாராஷ்டிர மாநிலம் ஹிங்கோலி மாவட்டத்தில் உள்ள தனது சொந்த ஊரில் தங்கியிருந்தார்.

இந்நிலையில் நேற்று (21) நள்ளிரவு 2 மணியளவில் அவருக்கு பிரசவ வலி ஏற்பட்டதையடுத்து அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் அங்கு அவருக்கு பிறந்த குழந்தை சில நிமிடங்களிலேயே இறந்தது.

அத்துடன் அவரது உடல்நிலையும் மோசமடையவே அவரை அங்கிருந்து 40 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஹிங்கோலி பொதுமருத்துவமனைக்கு கொண்டுசெல்லுமாறு மருத்துவர்கள் பரிந்துரைத்தனர். ஆனால் அவசரத்துக்கு ஒரு ஆம்புலன்ஸ் கூட கிடைக்காத நிலையில் பரிதவித்துத் தேடிய உறவினர்களுக்கு வெகுநேரத்துக்குப் பின் தனியார் ஆம்புலன்ஸ் ஒன்று கிடைத்தது. அதன் மூலம் ஹிங்கோலி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட பூஜா ஜுஞ்சர் வழியிலேயே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.