மனைவி கொலை விவகாரத்தில் இலங்கைத் தமிழரிற்கு கனடா நீதிமன்றம் மீண்டும் வழங்கிய உத்தரவு

மனைவியை கொலை செய்த இலங்கைத் தமிழரான சிவலோகநாதன் தனபாலசிங்கம் வழக்கை மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள கியூபெக் மேல் முறையீட்டு நீதிமன்றம் மறுத்துவிட்டது.

2017ஆம் ஆண்டு தனபாலசிங்கம் தனது மனைவியை கொலை செய்த வழக்கில், அவரது கைதுக்கும் அவரது விசாரணைக்கும் இடையில் 60 மாதங்கள் தாமதம் முறையானதல்ல என்று கியூபெக் உச்ச நீதிமன்ற நீதிபதி ஒருவர் கூறியதையடுத்து, அவர் விசாரணையிலிருந்து தப்பினார்.

’The Jordan decision’ என்னும் 2016ஆம் ஆண்டு உச்ச நீதிமன்ற தீர்ப்பு ஒன்றின்படி, ஒருவர் மீது குற்றம் சாட்டப்பட்டால், அவர் 30 மாதங்களுக்குள் விசாரிக்கப்படவேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

தனபாலசிங்கத்தின் மனைவி அனுஜா பாஸ்கரன், தம்பதியர் வாழ்ந்த வீட்டில் கழுத்தில் கத்திக் குத்துக் காயங்களுடன் பிணமாக கிடந்தார்.

அந்த கொலைக் குற்றச்சாட்டுக்கு இடைக்காலத்தடை வாங்கியதைத் தொடர்ந்து தனபாலசிங்கம் சமுதாயத்துக்கு ஆபத்தானவர் என்று தீர்ப்பளிக்கப்பட்டு, புலம்பெயர்தல் அதிகாரிகளால் உடனடியாக கைது செய்யப்பட்டார்.

மேல்முறையீடு செய்யப்பட்டிருந்த நிலையிலும், மேல் முறையீட்டு வழக்கில் விசாரணை தொடங்கப்படுவதற்கு முன்னரே 2017ஆம் ஆண்டு ஜூலை மாதம் தனபாலசிங்கம் இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டார்.

அவர் கனடாவில் இல்லாத நிலையிலும், கீழ் நீதிமன்றத்தின் முடிவு தவறானது என்று தெரிவித்த உச்ச நீதிமன்றம், அவர் மீது புதிய வழக்கு ஒன்றை தொடங்கவேண்டும் என கியூபெக் மேல் முறையீட்டு நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டது. இந்த வழக்கில் நேற்று தீர்ப்பளிக்கப்பட்டது.

மேல் முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகள் ஐந்து பேரில் மூவர், முதலில் அளிக்கப்பட்ட தீர்ப்பு சரியானதுதான் என்று கூறியதோடு, முதல் வழக்கை விசாரித்த நீதிபதிகள் மீண்டும் அந்த வழக்கை விசாரிக்க மறுத்ததில் தவறேதும் இல்லை என்று கூறி, உச்ச நீதிமன்றத்தின் மேல் முறையீட்டு மனுவை ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டனர்.

ஆகையால் தனபாலசிங்கம் மீதான வழக்கு, விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.