28 மணித்தியாலங்களைத் தாண்டியும் மீட்புப் போராட்டம் தீவிரம்: ஏர் லொக் மூலம் கைகள் பிடிப்பு

ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தை சுர்ஜித் 100 அடிக்கும் கீழே சென்றுவிடாதபடி ஏர் லொக் மூலம் கை பிடிக்கப்பட்டுள்ளதாக தற்போது கிடைத்திருக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே நடுக்காட்டுப்பட்டியில் உள்ள வீட்டின் தோட்டத்தில் விளையாடிக்கொண்டிருந்த 2 வயது குழந்தை சுர்ஜித் ஆழ்துளை கிணற்றுக்குள் தவறி விழுந்தான். ஆழ்துளை கிணற்றில் நேற்று மாலை 5.40 மணிக்கு விழுந்த குழந்தை முதலில் 26 அடியில் சிக்கியது.

பின்னர் 70 அடி ஆழத்திற்குச் சென்ற குழந்தை, அதன்பின் 85 அடி ஆழத்திற்கு சென்றான். இந்நிலையில் தற்போது குழந்தை மேலும் இறங்கி 100 அடி ஆழத்திற்குச் சென்றுவிட்டதாக மீட்புக்குழு அதிகாரிகள் தெரிவித்திருக்கிறார்கள். குழந்தை சிக்கியுள்ள ஆழ்துளைக்கிணறு 600 அடி ஆழமுள்ளதாகும்.

இதனிடையே ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தை சுர்ஜித் 100 அடிக்கும் கீழே சென்றுவிடாதபடி ஏர் லொக் மூலம் கை பிடிக்கப்பட்டுள்ளது. சுரங்கம் தோண்டி மீட்கும்போது அதிர்வில் குழந்தை கீழே சென்றுவிடாமல் தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதனிடையே 28 மணி நேரத்தை கடந்து, தொடர்ந்து மீட்புப் பணி நடைபெற்று வருகிறது.