வவுனியாவில் கோவிலுக்கு சென்ற பெண் பொலிஸ் உத்தியோகத்தருற்கு நேர்ந்தகதி!

வவுனியாவில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் அணிந்திருந்த தங்கச் சங்கிலியை அறுத்த இரு சந்தேக நபர்களை பொலிசார் கைது செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் தெரியவருகையில்,

கடந்த சனிக்கிழமை வவுனியா பூந்தோட்டம் அண்ணாநகர் முத்துமாரி அம்மன் கோவிலுக்கு பூவரசன்குளம் பொலிஸ் நிலையத்தில் பணியாற்றும் பெண் பொலிஸ் உத்தியோகத்தர் வழிபடச் சென்றுள்ளார்.

இதன்போது அவரின் கழுத்தில் அணிந்திருந்த தங்கச் சங்கிலியை அறுத்துக்கொண்டு மோட்டார் சைக்கிலில் இரு இளைஞர்கள் தப்பிச்சென்றுள்ளனர்.

இந்நிலையில் அவர்களை துரத்திச் சென்றபோதிலும் இருவரும் தப்பிச் சென்றுவிட்டனர்.

இந்நிலையில் அவ்வழியாக வாகனம் ஒன்றில் வந்தவர்களிடம் சங்கிலி திருடப்பட்ட விடயங்களைத் தெரிவித்து தப்பிச்சென்ற இளைஞர்களின் அடையாளங்களையும் தெரிவித்துள்ளனர்.

இதன்போது மோட்டார் சைக்கிளில் சென்ற ஒருவரின் தகவல்கள் தெரியும் என வாகனத்தில் வந்தவர் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து மகாறம்பைக்குளம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டு வவுனியா குற்றத்தடுப்பு பிரிவு பொலிசாருடன் இணைந்து சந்தேக நபர்களைத் தேடும் நடவடிக்கை முடுக்கிவிடப்பட்டிருந்தது.

இந்நிலையில் நேற்று மாலை இளைஞர் ஒருவரைக் கைது செய்து அவரிடம் மேற்கொண்ட விசாரணைகளின் போது மற்றைய இளைஞனையும் பொலிசார் கைது செய்துள்ளனர்.

இருவரிடம் தொடர்ந்து விசாரணைகள் மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ள பொலிசார் குறித்த இருவரும், வவுனியாவில் அண்மையில் பல்வேறு இடங்களில் இடம்பெற்ற திருட்டுச்சம்பவங்களுடன் தொடர்புபட்டிருக்கலாம் என கூறியுள்ளனர்.

அத்துடன் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் விசாரணைகளின் பின்னர் குறித்த இருவரும் நீதிமன்றத்தில் முற்படுத்தப்படவுள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.