தமிழ் மொழியை பேசக்கூடாது என உத்தரவிட்ட உணவகத்துக்கு எதிராக உடனடியாக விசாரணை நடத்தி, சட்ட நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டுள்ளதாக அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் இது குறித்து பதிவொன்றை இட்டுள்ளார். அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
“அரசியலமைப்பில் குறிப்பிட்டுள்ள சமத்துவத்திற்கான உரிமையை மீறுவோர் குறித்து சட்ட நடவடிக்கைகளை எடுக்குமாறு அரச கரும மொழிகள் ஆணையாளருக்கு உத்தரவிட்டுள்ளதாக” அவர் கூறியுள்ளார்.
இதேவேளை, கொழும்பிலுள்ள பிரபல உணவகமொன்றில் தமிழ் மொழியில் உரையாட தடை விதிக்கப்பட்டுள்ளது. கொழும்பு 7 ஹொர்ட்டன் பிளேஸ் பகுதியிலுள்ள பிரபல உணவகமொன்றிலேயே இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
குறித்த உணவகத்தில் ஆங்கிலம் மற்றும் சிங்களம் ஆகிய மொழிகளில் மாத்திரமே உரையாட வேண்டும் என அறிவிப்பு பலகை மூலம் அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
#Peppermint #Café, a pvtly owned cafe at #76 Wijerama Mw, I'm told, displays this notice violating Chapter III-Fundamental Rights Clause 12-Right to Equality of the constitution. I hv instructed Official Languages Comm to step-in. Violators may hv to face legal consequences. #lka pic.twitter.com/uyVgeqieo9
— Mano Ganesan (@ManoGanesan) October 29, 2019