பரபரப்பான கடைசி 20 நிமிடங்கள்.. உடலை மீட்டு கொண்டு வந்த டீம்.. நடந்தது என்ன?

வெறும் 20 நிமிடங்களில் சுஜித்தின் உயிர்ப் போராட்டம் முடிவுக்கு வந்திருக்கிறது. அதாவது சுஜித்தின் உயிரற்ற உடலை மீட்க 20 நிமிடமே ஆகியிருக்கிறது.

எத்தனை எத்தனை போராட்டங்கள்.. என்னெவெல்லாம் முடியுமோ அதையெல்லாம் செய்த மீட்புப்படையினர்.

இரவு பகலாக அயராமல் உழைத்த மீட்புப் பணியாளர்கள்.. அத்தனை பேரையும் ஏமாற்றி விட்டு போய் விட்டது அந்த செல்லக் குழந்தை..

நினைக்க நினைக்க மனம் ஏங்கித் தவிக்கிறது. கைக்கு எட்டியது என்ற நிலையில்தான் சுஜித்தை நாம் முதலில் பார்த்திருந்தோம்.

26 அடி தொலைவில் கிடந்த அந்தப் பிஞ்சுக் குழந்தையை அதல பாதாளத்திற்கு நழவ விட்டு நாம் துடித்த துடிப்பு கொஞ்ச நஞ்சமல்ல.

தாயின் கருவறையில் தாயின் வாசம் உணர்ந்து வளர்ந்து வெளியே வந்த பிள்ளை.. இருட்டறையில் சிக்கித் தவித்து உயிர் மூச்சை விட்டது எத்தனை பெரிய வலி..

எத்தனை பெரிய சோகம். ஆனால் அந்த சோகத்தை சுஜித் சத்தமே இல்லாமல் அனுபவித்து விட்டுப் போய் விட்டான். நாம்தான் சங்கடத்தில் சிக்கித் தவித்துக் கொண்டுள்ளோம்.

80 மணி நேர மீட்புப் போராட்டத்தின் இறுதிக் கட்டத்தில் 20 நிமிடங்களில் சுஜித்தின் இறந்த உடலை எடுத்துள்ளனர் மீட்புப் படையினர்.

அவன் விழுந்த அதே போர்வெல் மூலமாகவே உடலையும் மீட்டுள்ளனர். அதிகாலை நான்கு மணியளவில் உடலை மீட்கும் பணியில் இறங்கியுள்ளனர்.

உடல் அழுகிய நிலையில் இருப்பதை கண்டுபிடித்த மீட்புப் படையினர் அதை எந்த அளவுக்கு பத்திரமாக மீட்க முடியும் என திட்டமிட்டுள்ளனர்.

இதையடுத்து 20 பேர் கொண்ட குழு கடைசி கட்ட மீட்புப் பணியில் ஈடுபட்டது. சுஜித் விழுந்து கிடந்த போர்வெல் மூலமாகவே உடலை வெளியே எடுத்துள்ளனர்.

உடலை எடுத்த போது சில பாகங்கள் போர்வெல்லிலேயே விழுந்து விட்டதாகவும் கூறப்படுகிறது. அந்த அளவுக்கு உடல் சிதிலமடைந்துள்ளது.

உடலை மீட்டு வெளியே கொண்டு வர கிட்டத்தட்ட 20 நிமிடங்கள் பிடித்ததாக சொல்கிறார்கள். அதாவது 80 மணி நேரப் போராட்டம் 20 நிமிடத்தில் முடிவுக்கு வந்துள்ளது.

உடலை வெளியே கொண்டு வந்தபோது மீட்புப் படையினர் பலரும் கலங்கிப் போய் அழுது விட்டனராம். அத்தனை பேரும் பட்ட பாட்டுக்கு பலன் இல்லாமல் போய் விட்டதே என்று அழுதுள்ளனர்.

காவல்துறையினர்தான் மிகவும் வருத்தமடைந்துள்ளனர். பல ஆயிரம் பேர் கூடி வந்து சிறுவனை மீட்கும் பணியை பார்த்துச் சென்றனர்.

எந்த அசம்பாவிதமும், பிரச்சினையும் இல்லாமல் மக்கள் வந்து போனதாக கூறும் காவல்துறையினர், அத்தனை பேரும் சுஜித் வந்து விடுவான் என்று நம்பிக் காத்திருந்தனர்.

நாங்களும் சுஜித்துக்காக பிரார்த்தித்தபடிதான் பணியில் ஈடுபட்டிருந்தோம். ஆனால் சுஜித் வராமலேயே போய் விட்டான் என்று கூறி கலங்கியுள்ளனர்.

சுஜித்தின் தாயார் கலாமேரிக்கு ஆறுதலாக சில பெண் போலீஸார் கூடவே இருந்துள்ளனர். அந்த தாயின் தவிப்பையும், அவரது அழுகையையும் பார்த்து கூடவே இருந்து ஆறுதல் சொல்லி வந்த அந்த பெண் போலீஸார், கடைசியில் கலாமேரியின் தாயுணர்வை சுஜித்தின் மரணச் செய்தி புரட்டிப் போட்டதை பார்த்து கலங்கி போய் அழுது விட்டனராம்.