13 நாட்களாக காணாமல்போன தமிழ்மாணவன் சடலமாக கண்டெடுப்பு!

நானுஓயாவில் கடந்த 13 நாட்களாக காணாமல்போயிருந்த பாடசாலை மாணவரொருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

நானுஓயா – டெஸ்போர்ட் தோட்டத்தைச் சேர்ந்த குணசேகரன் சிவன்ராஜ் என்ற 14 வயதுடைய மாணவனையே நானுஓயா ஆற்றிலிருந்து நேற்றைய தினம் சடலமாக மீட்டுள்ளனர்.

குறித்த மாணவர் கடந்த 16ஆம் திகதியிலிருந்து காணாமல்போயுள்ளதாக அவரது பெற்றோரால் நானுஓயா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதனையடுத்து நானுஓயா பொலிஸாரும், தோட்ட மக்களும் இணைந்து மாணவனை தேடும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

இந்த நிலையிலேயே, கொத்மலை ஓயாவுக்கு நீரை கொண்டு செல்லும் நானுஓயா ஆற்றின் மூங்கில் புதருக்கு அருகில் சிக்கியிருந்த நிலையில் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை நானுஓயாபொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.