யாழ் விமானநிலைய வீதியை வழங்க மறுக்கும் விமானப்படை! புதிய சிக்கல் ஆரம்பம்

யாழ்ப்பாணம்- சா்வதேச விமான நிலையத்திற்கு செல்லும் பிரதான வீதியில் சுமாா் 400 மீற்றா் நீளமான பகுதியை விமானப்படையினா் வழங்க மறுத்துவருகின்றனர்.

இந் நிலையில் அங்கு காட்சிப்படுத்தப்பட்ட அறிவுறுத்தல் பலகையில் விமான நிலைய வீதி என குறிப்பட்டதை அதிகாரிகள் பொலிதீன் ஒட்டி மறைத்துள்ளனா்.

யாழ்ப்பாணம் விமான நிலையத்திற்கு செல்வதற்கான பிரதான வீதியான தெல்லிப்பளை சந்தியில் இருந்து (B-437 வல்லை- தெல்லிப்பளை-அராலி ) கட்டுவன் – மயிலிட்டி வீதியூடாக செல்லும் போது கிழக்கு பக்கமாக உள்ள மயிலிட்டி தெற்கில் 400 மீற்றர் வீதி விமானப்படையினரின் முட்கம்பி வேலிக்குள் இருப்பதால் அதனை பின்நகர்த்தாத பிரச்சினை காரணமாக தெல்லிப்பளை சந்தியில் பொருத்தப்பட்ட வீதியை காட்டும் குறிகாட்டும் பெயர்பலகையில் யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்திற்கு செல்லும் வீதி என குறியீடு பொலித்தீன் சீற்றினால் மறைத்து ஒட்டப்பட்டுள்ளது.

கடந்த மாதம் காணி விடுவிப்பு தொடர்பில் ஆளுநருடனான சந்திப்பில் இந்த முட்கம்பி வேலியை அகற்றுவதாக விமானப்படை அதிகாரிகள் சம்மதித்த போதும், அதன் பின்னர் விமான நிலையம் திறக்க முன்னமோ அல்லது கட்டுவன் மயிலிட்டி வீதி புனரமைப்பு இடம்பெறும் வேளையிலோ இதுவரை அந்த வேலியை அகற்ற விமானப்படை அகற்றவில்லை.

கம்பிவேலியை பின்நோக்கி நகரத்த விமான நிலையத்துக்கு பாதுகாப்பு பிரச்சினை என விமானப்படை காரணம் கூறுகிறது. இராணுவத்தரப்பின் தகவல்படி தாம் கம்பி வேலி

அகற்ற தயார் என்கின்றபோதும் இதற்கு பின் உள்ள விமானப்படையினரின் முட்கம்பி வேலி அகற்ற இது விமானப்படை தலையீடு இன்றி தம்மால் முடியாது என படையினர் கூறுகின்றனர்.

விமான நிலையம் திறந்து இரு வாரங்களை கடந்த நிலையில் விமான நிலையத்தினை பார்வையிட தெல்லிப்பளை சந்தியூடாக செல்லும் பொதுமக்கள் மற்றும் விமானநிலைய அதிகாரிகள் கிராமக்கோட்டு சந்திக்கு எதிர்புறமாக தெற்குபக்கமாக இடையில் 400 மீற்றர் வீதி விமானப்படையினர் அமைத்துள்ள கம்பி வேலிக்குள்உள்ளது.

இதனால் இவ்வீதியால் போகமுடியாது திரும்பவேண்டியுள்ளது. வேலிக்கு அருகில் உள்ள தனியார் காணிஊடாக இதுவரை காலமும் சென்று வந்த நிலையில் வீதி புனரமைப்பு இடம்பெற்றதால் தனியார் காணி உரிமையாளர் குறுக்காக வீதியை கொங்கிறீட் தூண்கொண்டு வேலி அமைத்ததால் முழுமையாக தடையாகிவிட்டது.

இந்த சிக்கல் காரணமாக தெல்லிப்பளை சந்தியில் அமைத்த வீதி குறிகாட்டும் பெயர் பலகையில் விமான நிலையத்துக்கு செல்லும் வீதி மறைக்கப்பட்டுள்ளது.

எனினும் இந்த சிக்கல் தொடர்பில் விமானப்படை தலைமையுடன் பேசி அதிகாரிகள் இறுதியாக முடிவு இதுவரை எடுக்கப்படவில்லை .

நவம்பர் மாதம் தொடக்கம் யாழ் சர்வதேச விமான சேவை ஆரம்பிக்க ஏற்பாடுகள் இடம்பெற்று வருகின்றது.

எனினும் விமான நிலையத்துக்கு செல்ல இந்த பிரதான வீதிக்கு தீர்வை உடன்பெற்றுக்கொடுக்க அரச அதிபர் ஆளுநர் பிரதமர், மற்றும் சிவில் விமான போக்குவரத்து அமைச்சர் அர்ஜுன ரணதுங்க ஆகியோர் நடவடிக்கை எடுக்கவேண்டும் என மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.