யாழிலிருந்து சென்னை செல்ல தயார் நிலையில் விமானங்கள்; தற்போது வெளியானது புதிய தகவல்!

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் மற்றும் சென்னை சர்வதேச விமான நிலையம் என்பவற்றிற்கிடையிலான விமான சேவைகள் இம்மாதம் 10 ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் என இலங்கை சிவில் விமான போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.

இதவேளை யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையம் மற்றும் இந்தியாவின் திருச்சிராப்பள்ளி சர்வதேச விமான நிலையத்துக்கிடையில் எதிர்வரும் 10 ஆம் திகதி முதல் வாரத்திற்கு மூன்று விமான சேவைகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் சிவில் விமான போக்குவரத்து அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

இந்த விமான சேவை தினசரி விமான சேவையாக இடம்பெறவுள்ளதாகவும், பயண நேரம் 32 முதல் 50 நிமிடங்களுக்குள் இருக்கும் எனவும் அமைச்சு அறிவித்துள்ளது.

இவ்வாறு பயணம் மேற்கொள்பவர்கள் டிக்கெட் முன்பதிவு முகவர் மூலம் விமானங்களுக்குரிய வலைத்தளங்களிலிருந்து மக்கள் தங்கள் விமான டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கான விசா அனுமதியினை இந்திய உயர் ஸ்தானிகராலயம், யாழ்ப்பாணத்தின் கீழ் உள்ள தூதரக பொது அலுவலகத்தில் இருந்து பெற்றுக் கொள்ளவும் முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.