பொலிஸார் மீது வாள்வெட்டு 14 சந்தேகநபர்களின் கட்டுக்காவல் நீடிப்பு

யாழ்ப்பாணம், கொக்குவிலில் பொலிஸார் மீது வாள்வெட்டு நடத்தினர் என்ற குற்றசாட்டில் கைதாகிய 14 பேரின் விளக்கமறியலை எதிர்வரும் நவம்பர் 9ஆம் திகதிவரை நீடித்து யாழ்ப்பாணம் நீதிவான் மன்று உத்தரவிட்டது.

யாழ்ப்பாணம், கொக்குவில் பகுதியில் வைத்து கடந்த ஜூலை 30ஆம் திகதி கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய பொலிஸார் இருவர் மீது கும்பல் ஒன்று வாள்வெட்டுத் தாக்குதல் நடத்தியது. அந்தத் தாக்குதலுடன் தொடர்புடையவர்கள் என்ற குற்றச்சாட்டில் இரண்டு வாரங்களுக்குள் 15 பேர் யாழ்ப்பாணம் மற்றும் கொழும்பில் கைது செய்யப்பட்டனர்.
15 சந்தேகநபர்களில் ஒருவர் மட்டும் பிணையில் விடுவிக்கப்பட்டார்.

ஏனைய 14ஆம் பேரும் யாழ்ப்பாணம் நீதிவான் மன்றின் கட்டளையில் கட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த வழக்கு யாழ்ப்பாணம் நீதிவான் மன்றில் இன்று விசாரணைக்கு வந்தது. 15 சந்தேகநபர்களும் மன்றில் முன்னிலையாகினர். 14 சந்தேகநபர்களின் விளக்கமறியலை எதிர்வரும் நவம்பர் 9ஆம் திகதிவரை நீடித்த நீதிவான், அன்றுவரை வழக்கை ஒத்திவைத்தார்.