யாழ்- சென்னை விமான சேவை- ஏமாற்றத்திலும் அதிருப்தியிலும் பயணிகள்!

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்திலிருந்து சென்னைக்கான விமானப் போக்குவரத்துக்குள் நேற்றில் இருந்து ஆரம்பிகபட்டுள்ளது.

அதன்படி வாரத்திற்கு மூன்று நாட்கள் திங்கள், புதன், மற்றும் சனிக்கிழமைகளில் விமான சேவைகள் இடம்பெறவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தியாவின் சென்னையில் இருந்து காலை 10.35 மணிக்கு யாழ்ப்பாணம் விமான நிலையம் நோக்கி வரும் விமானமானது மீண்டும், யாழ்ப்பாணத்தில் இருந்து மாலை 2.10 மணிக்கு சென்னை நோக்கி புறப்படும் என விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதற்காக யாழ்ப்பாணத்தில் இருந்து சென்னை நோக்கி செல்ல ஒருவழி விமான சேவைக்காக 12,990 ரூபாய் அறவிடப்படவுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் , முன்னுக்குப் பின் முரணான விமானச் சீட்டுக்களின் விலை தொடர்பில் வெளியாகும் தகவல்களினால் பயணிகள் கடும் அதிருப்தியடைந்துள்ளனர்.

அத்துடன் , யாழ்ப்பாணம் – சென்னைப் பயணத்தில் பயணி ஒருவரின் பயணப்பொதி அளவு 15 கிலோவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை வழமையாக கொழும்பு – சென்னை பயணத்தில் 30 கிலோ வரையிலான பொருட்கள் பயணிகளுடன் அனுமதிக்கப்படுகின்ற நிலையில் யாழில் 15 கிலோவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளமை விசனத்தை ஏற்படுத்தியுள்ளது.

அத்துடன் , சரிபாதியாக 15 கிலோவாக குறைக்கப்பட்டிருப்பதை பயணிகள் ஏற்றுக் கொள்ள முடியாது என்று குறிப்பிடுகிறார்கள்.ஏற்கனவே விமானச் சீட்டின் விலை தொடர்பில் அதிருப்தியடைந்திருக்கும் பயணிகளுக்கு பயணப் பொதியின் எடைக் குறைப்பும் பெரும் ஏமாற்றத்தைக் கொடுத்துள்ளது.

இதேவேளை விமானச் சீட்டுக்களின் விலை உயர்வுக்குத் தாம் காரணமல்ல என்று அலையன்ஸ் எயார் வானூர்தி நிறுவனம் ஊடகம் ஒன்றிற்கு தகவல் வழங்கியுள்ளது.பயணக் கட்டணமாகத் தமது தரப்பில் 45 அமெரிக்க டொலர்கள் மட்டுமே அறவிடப்படுகின்ற போதும் வரிகள் மற்றும் வானூர்தி நிலையப் பயன்பாட்டுக் கட்டணம் உள்ளடங்கலாக 50 அமெரிக்க டொலர்கள் இலங்கை அரசாங்கத்தினால், அறவிடப்படுவதாகவும் நிறுவனம் தெரிவித்துள்ளது.

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்திலிருந்து இலகுவாக பயணத்தை மேற்கொள்ள முடியும் என்று பெரும் எதிர்பார்ப்போடு இருந்த பயணிகளுக்கு விமானக் கட்டணத்தின் அதிகரிப்பும், பயணப் பொதிகளின் எடையிலும் குறைக்கப்பட்டமையானது, கடுமையான ஏமாற்றத்தைக் கொடுத்துள்ளதுடன், அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.