ரயிலுடன் மோதுண்டு இளம் குடும்பத்தலைவர் சாவு – யாழ்.நகரில் சம்பவம்

யாழ்ப்பாணம் ரயில் கடவையில் தொடருந்துடன் மோதுண்டு இளம் குடும்பத்தலைவர் உயிரிழந்தார்.

இந்தச் சம்பவம் இன்று முற்பகல் 9 மணியளவில் யாழ்ப்பாணம் அன்னசத்திர லேனில் உள்ள பாதுகாப்பற்ற ரயில்வே கடவையில் இடம்பெற்றது.

யாழ்ப்பாணம் – நாவலர் வீதியில் பொருளியல் கல்லூரிக்கு முன்பாகவுள்ள உணவகத்தின் உரிமையாளரான நிசாந்தன் (வயது -31) என்ற ஒரு பிள்ளையின் தந்தையே உயிரிழந்தார்.

காங்கேசன்துறையிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிப் பயணித்த தொடருந்துடன் மோட்டார் சைக்கிளில் பயணித்த உணவக உரிமையாளர் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்தார்.

அவர் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட நிலையில் உயிரிழந்தார் என்று மருத்துவர்களால் தெரிவிக்கப்பட்டது.

சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.