மோசமான காரியத்தில் ஈடுபட்டு வந்த இளம் கர்ப்பிணி பெண்ணும் – கணவனும் கைது

கண்டியில் இருந்து மஹியங்கனை நோக்கி முச்சக்கரவண்டியில் ஹெரோயின் மற்றும் கேரளா கஞ்சாவை கடத்திச் சென்ற 23 வயதான கர்ப்பிணி பெண்ணையும், 21 வயதான பெண்ணின் கணவனையும் மஹியங்கனை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட இவர்கள் மஹியங்கனை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டு 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

மஹியங்கனை பொலிஸ் நிலையத்தின் குற்ற விசாரணைப் பிரிவினருக்கு கிடைத்த தகவல் ஒன்றை அடுத்து மேற்கொண்ட விசாரணைகளின் பின்னர் மகாவலி பாலத்திற்கு அருகில் நேற்று முச்சக்கரவண்டியை மறித்து சோதனையிட்ட போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட பெண்ணிடம் இருந்து 9 கிராம் ஹெரோயின், 173 கிராம் கஞ்சா, பெண்ணின் கணவனிடம் இருந்து 2 கிராம் ஹெரோயின் 610 கிராம் கஞ்சாவை என்பவற்றை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

விசேடமாக தைக்கப்பட்டிருந்த பை ஒன்றில் மறைத்து வைத்து நுட்பமான முறையில் இந்த போதைப்பொருள் கடத்திச் செல்லப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்டவர்கள் மஹியங்கனை நகரின் தொடம்வத்த பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என பொலிஸார் கூறியுள்ளனர்.

மஹியங்கனை பிரதேசத்திற்கு பெருமளவில் போதைப்பொருளை கொண்டு வந்து விற்பனை செய்து வந்த இதே குடும்பத்தை சேர்ந்த சிலர் கடந்த சில மாதங்களில் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.