இலங்கை தொடர்பில் அமெரிக்கா வெளியிட்டுள்ள எச்சரிக்கை

ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னரும் பின்னரும் ஆர்பாட்டங்களுக்கான சாத்தியக்கூறுகள் காணப்படுவதனால் தமது நாட்டு பிரஜைகளை அவதானமாக இருக்குமாறு அமெரிக்க தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.

இந்த விடயம் தொடர்பாக அமெரிக்க தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலின் பின்னர் விடுக்கப்பட்ட 2ஆவது நிலை பயண ஆலோசனையில் எந்த மாற்றமும் இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளது.

பெரிய கூட்டங்கள் அல்லது ஆர்ப்பாட்டம் நடைபெறும் இடங்களுக்கு அருகில் இருப்பவர்கள் முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும் சுற்றுலா தளங்கள் மற்றும் மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள பொது இடங்களுக்குச் செல்லும்போது அவதானமாக இருக்குமாறும் தூதரகம் கேட்டுக்கொண்டுள்ளது.

அத்தோடு உள்ளூர் அதிகாரிகளின் அறிவுறுத்தல்களைப் பின்பற்றுமாறும் உள்நாட்டு ஊடகங்களை கண்காணித்து, புதிய தகவல்களை அடிப்படையாகக் கொண்டு அடுத்த கட்ட நடவடிக்கைகளை செய்யுமாறும் கேட்டுக்கொண்டுள்ளது.