பிரத்தியேகமான செய்தி ஒன்றை கோத்தபாயவுக்கு வெளிபடுத்தியுள்ள வடக்கு கிழக்கு மக்கள்!

    வடக்கு கிழக்கு மக்கள் இந்த ஜனாதிபதி தேர்தலிலே தமது இந்த வாக்களிப்பின் மூலம் பிரத்தியேகமான செய்தி ஒன்றை பதிவியேற்கவுள்ள ஜனாதிபதிக்குச் சொல்லியிருக்கின்றார்கள் என இலங்கை தமிழரசுக் கட்சி தெரிவித்துள்ளது.

    இவ்வாறு தேர்தல் மூலம் வழங்கப்பட்டிருக்கின்ற ஆணையினை புதிய ஜனாதிபதி கருத்திற்கொண்டு செயற்படுவார் என நம்புவதாக கட்சியின் பொதுச் செயலாளர் கி.துரைராசசிங்கம் தெரிவித்துள்ளார்.

    நடைபெற்று முடிந்த ஜனாதிபதி தேர்தலில் அமோகமான வாக்களிப்பினை மேற்கொண்ட மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், புதிதாக நியமிக்கப்படவுள்ள ஜனாதிபதிக்கு வாழ்த்துத் தெரிவிக்கும் முகமாகவும் இன்று (ஞாயிற்றுக்கிழமை) வெளியிட்ட அறிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

    குறித்த அறிக்கையில், “இலங்கையின் 8ஆவது ஜனாதிபதியாக நியமிக்கப்படவுள்ள கோட்டாபய ராஜபக்ஷவுக்கு எமது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

    நடைபெற்று முடிந்த தேர்தலில் வடக்கு கிழக்கு மக்கள், குறிப்பாக தமிழ் மக்கள் அமோகமாக வாக்களித்திருக்கின்றார்கள். 2015ஆம் ஆண்டின் ஜனாதிபதி தேர்தலில் அளிக்கப்பட்ட வாக்குகளை பின்தள்ளியவர்களாக வடக்கு கிழக்கின் எல்லா மாவட்டங்களிலும் அதிகூடிய வாக்குகளை அளித்திருக்கின்றார்கள்.

    இன்னுமொரு செய்தியாக தென்னிலங்கையில் நான்கு இலட்சம் அளிவில் வாக்குச் சரிவு ஏற்பட்டிருக்கின்ற அதேவேளையில், எமது மக்களின் வாக்களிப்பு வீதம் பாராட்டத்தக்க அளவு அதிகரித்துள்ளது. இதற்காக எமது மக்களுக்கு எங்களுடைய நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

    தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர்கள் மற்றும் உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள், எமது ஏனைய ஆதரவாளர்கள் உட்பட அவர்களால் நெறிப்படுத்தப்பட்ட எமது அருமை வாக்காளர்கள் எல்லோருக்கும் இந்த நன்றிகள் உரித்தாகட்டும்.

    வடக்கு கிழக்கு மக்கள் இந்த வாக்களிப்பின் மூலம் பிரத்தியேகமான செய்தி ஒன்றை புதிய ஜனாதிபதிக்குச் சொல்லியிருக்கின்றார்கள். அந்தச் செய்தியினை புதிய ஜனாதிபதி கருத்திற்கொண்டு செயற்படுவார் என்று நம்புகின்றோம்.

    இனி நாட்டின் ஜனாதிபதி என்ற ரீதியிலே மக்களுடைய ஆணையை மதித்து புதிய ஜனாதிபதி இந்நாட்டின் சகல பாகங்களுக்கும் சுபீட்சம் அளிக்கும் வகையில் தனது செயற்பாடுகளை மேற்கொள்வார் என்ற நம்பிக்கையோடு, எமது மக்களுக்கு மீண்டும் நன்றியையும் நியமிக்கப்படவுள்ள புதிய ஜனாதிபதிக்கு மீண்டும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கின்றோம்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.