கோத்தபாய தோல்வியடைந்திருந்தால் கிழக்கு மாகாணம் குழிதோண்டி புதைக்கப்பட்டிருக்கும் : கருணா

வடகிழக்கு தமிழர்கள் தமக்கான சிறந்த வாய்ப்பினை இழந்துள்ளதாக முன்னாள் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார்.

கோத்தபாய ராஜபக்ஸ வெற்றிபெறுவார் என்று தெரிந்திருந்தும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைமைகள் பணத்தினைப் பெற்றுக் கொண்டு தமிழ் மக்களின் வாக்குகளை சிதறடித்துள்ளதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார்.

இன்று மாலை மட்டக்களப்பு, களுவாஞ்சிகுடியில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.

இதன்போது தொடர்ந்து கருத்து தெரிவித்த விநாயகமூர்த்தி முரளிதரன்,

52வீதம் வாக்குகளைப்பெற்று ஜனாதிபதியாக கோத்தபாய தெரிவுசெய்யப்படுவார் என நான் வாக்களிக்க சென்ற பின்னர் தெரிவித்திருந்தேன். அதேபோன்று தற்போது நடந்துள்ளது. அதனைவிட கூடுதலான வாக்குகளைப்பெற்று வெற்றி பெற்றுள்ளார்.

வடகிழக்கு தமிழ் மக்கள் சிறந்த வாய்ப்பினை இழந்திருக்கின்றார்கள். கோத்தபாய ராஜபக்ஸ நிச்சயமாக வெற்றிபெறுவார் என்று தெரிந்திருந்தும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைமைகள் பணங்களைப்பெற்றுக் கொண்டு தமிழ் மக்களை ஏமாற்றி மக்களை திசை திருப்பி வாக்குகளை சிதறடித்துள்ளனர்.

தமிழ் மக்கள் கோத்தபாயவுக்கு வாக்களித்திருந்தால் நாங்கள் உரிமையுடன் எங்களது விடயங்களை கேட்டு சாதிப்பதற்கான நிலையிருந்தது. மகிந்த ராஜபக்ஸவே பிரதமராக வரவிருக்கின்றார். பாரட்சமற்ற வகையில் விடயங்களை செய்வார்.

இருந்தபோதிலும் தமிழ் மக்கள் புத்திசாதுரியமாக செயற்படவேண்டிய காலமாகவுள்ளது. தமிழ் தேசிய கூட்டமைப்பின் தேஞ்சிபோன தலைமைகளை நம்பிக்கொண்டு வாக்குகளை வீணடித்துக்கொண்டிருந்தால் எதுவித நன்மையினையும் தமிழ் மக்கள் பெறப்போவதில்லை.

இந்த ஜனாதிபதி தேர்தலில் கோத்தபாய தோல்வியடைந்திருந்தால் கிழக்கு மாகாணம் குழிதோண்டி புதைக்கப்பட்டிருக்கும் எனத் தெரிவித்தார்.