கோத்தபாய கடமைகளை பொறுப்பேற்கும் போது ஏற்படுத்தப்பட்ட ஒழுங்கு விதிகளால் குவியும் பாராட்டுக்கள்!

ஜனாதிபதியாக கோத்தபாய ராஜபக்ச கடமைகளை பொறுப்பேற்ற போது காலி முகத்திடல் வீதி மூடப்படாமல் இருந்தமையானது பலராலும் வரவேற்கப்பட்டுள்ளது.

ஏழாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக, கோத்தபாய ராஜபக்ச இன்று கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டார்.

இன்று காலை ஜனாதிபதி செயலகத்தில் நடந்த நிகழ்வில், கோத்தபாய ராஜபக்ச, தமது கடமைகளை ஏற்றுக் கொண்டிருந்தார்.

இந்த நிகழ்வில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பொதுஜன பெரமுன தலைவர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

இதன்போது செயலகத்தில் புதிய ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சவுக்கு இராணுவ அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது.

வழமையாக இதுபோன்ற நிகழ்வுகள் நடைபெறும் போது, காலிமுகத்திடல் வீதி மூடப்படும். இதனால் குறிப்பிட்ட நேரத்தில் அந்தப் பகுதியில் வாகன நெரிசல்கள் ஏற்படுவதுடன் பயணிகளுக்கு அசௌகரியமாகவும் அமைவதுண்டு.

எனினும் இன்றைய நிகழ்வு நடைபெற்ற போது, காலி முகத்திடல் வீதி மூடப்படவில்லை, வழக்கமான போக்குவரத்துக்கு அனுமதிக்கப்பட்டமையானது வரவேற்கப்பட்டுள்ளது.

இதேவேளை அரச அலுவலகங்களில் ஜனாதிபதியினதோ பிரதமரினதோ புகைப்படங்கள் வைக்கக் கூடாது என்று அநுராதபுரத்தில் வைத்து ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச தனது முதல் கருத்தை வெளியிட்டமையும் அனைவராலும் பாராட்டப்பட்டமை குறிப்பிடத்தக்கது.