சஜித் தோற்றதற்கு இவைதான் காரணம்! பிரதி அமைச்சர் வெளியிட்ட தகவல்

புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவின் தோல்விக்கு ஐக்கிய தேசியக் கட்சியிலுள்ள சிலர் பொறுப்புக் கூற வேண்டும் என பிரதி அமைச்சர் நளின் பண்டார தெரிவித்தார்.

கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இதனைக் கூறினார்.

சஜித் பிரேமதாசவின் தோல்விக்காக செயற்பட்ட இவர்களிடமிருந்து கட்சியைக் காப்பாற்றி, புதிய உத்வேகத்துடன் முன்னோக்கிச் சென்று பொதுத் தேர்தலை வெற்றிகொள்ளக் கூடிய வகையில் கட்சி உறுப்பினர்கள் ஒன்றிணைய வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டார்.

ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஸ 14 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் சஜித் பிரேமதாசவை வெற்றி கொண்டார். சஜித் பிரேமதாசவின் இந்த தோல்வி குறித்து மீள்பரிசீலனை செய்ய வேண்டும்.

இந்த தோல்விக்கு நேரடியாக தாக்கம் செலுத்திய ஒன்றுதான் கடந்த ஏப்ரல் 21 முன்னெடுக்கப்பட்ட பயங்கரவாத தாக்குதல்.

பயங்கரவாதி சஹ்ரானின் தாக்குதலுடன் அரசாங்கத்துக்கு பாரிய அழுத்தம் ஏற்பட்டது.நாம் செய்த ஆய்வுகளில், சிங்கள பௌத்த மக்களிடையே கடந்த ஏப்ரல் தாக்குதலுக்கு முன்னர் ஜனாதிபதி வேட்பாளர்களான சஜித் பிரேமதாசவுக்கும் கோட்டாபய ராஜபக்ஸவுக்கும் இடையில் 4 சதவீத இடைவெளிதான் காணப்பட்டது.

இது கடந்த 21 தாக்குதலின் பின்னர் 36 சதவீதமாக அதிகரித்தது. இதனால், இந்த ஜனாதிபதித் தேர்தலில் கடந்த ஏப்ரல் 21 தாக்குதல் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தியது.

அதேபோன்று, தேர்தல் ஒன்றை எதிர்நோக்கியுள்ள நிலையில், எம்.சீ.சீ. உடன்படிக்கை வெளியில் வந்தது. எம்.சீ.சீ. உடன்படிக்கை தரமற்ற ஒரு உடன்படிக்கை என நான் கூறவரவில்லை. இருப்பினும், இந்த உடன்படிக்கையினால் நாட்டின் சொத்துக்கள் விற்கப்படப் போவதாக எதிர்த் தரப்பினர் பிரச்சாரத்தை முன்னெடுத்தனர்.

அத்துடன், சஜித் பிரேமதாசவுக்கு ஊடகங்களில் பெற்றுக் கொடுக்கப்பட்ட குறைந்தளவு அவகாசமும் தோல்வியில் தாக்கம் செலுத்தியது.

சஜித் பிரேமதாசவுக்கு தேர்தல் பிரச்சாரத்தை முன்னெடுத்துச் செல்லப் போதுமான நிதி காணப்படாமை தேர்தல் பிரசாரத்தை பலப்படுத்த முடியாமல் போனது.

சஜித் பிரேமதாச அவருடைய கடந்த 26 வருட கால அரசியலில் ஊழல் மோசடிகள் மூலம் பணம் சம்பாதிக்க வில்லை.கட்சிக்குக் கிடைத்த நிதியை வழிநடாத்தியது யார்? அது சரியாக சேகரிக்கப்பட்டதா? அது முறையாக தேர்தலுக்கு பயன்படுத்தப்பட்டதா? என்பதில் பிரச்சினையுள்ளது.

அத்துடன், சிங்கள பௌத்த மக்கள் விகாரையில் ஒன்று கூடும் மக்கள். கடந்த காலத்தில் அரசாங்கம் முன்னெடுத்த சில தீர்மானங்களினால், சிங்கள பௌத்த மக்கள் எங்களை விட்டும் தூரமாகினர். சஜித் பிரேமதாச அதற்கு பொறுப்புச் சொல்ல வேண்டிய நபர் அல்லர்.

இருப்பினும், அதுவும் அவரின் தலையின் மேல் வந்து வீழ்ந்தது.

இந்த அரசாங்கத்தின் ஐந்து வருட காலத்தில் எமது தலைவர்களின் செயற்பாடுகள் மற்றும் பௌத்த விரோத குழுவாக எம்மை எடுத்துக் காட்டியவர்களின் நடவடிக்கைகள் என்பவற்றினால் எமக்கு சிங்கள பௌத்த மக்களின் வாக்குகள் பாரியளவில் இழக்க வேண்டி ஏற்பட்டது.

இந்த தேர்தல் தோல்வி குறித்து முறையாக மீள்பரிசீலனை செய்து நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டாலேயே அரசியல் பயணத்தை தொடரமுடியும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.