‘என் மகளை அடித்தே கொன்று விட்டனர்’… திருமணமான ஒரு வருடத்தில் இளம்பெண்ணிற்கு நடந்த சோகம்!

அரியலூர் மாவட்டத்தில் திருமணமாகி ஒரு வருடத்தில் இளம்பெண் தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.

செந்துறை அருகே மருவத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் பிரபாகரன்(27) மின்வாரிய துறையில் வேலை செய்து வருகின்றார். இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த கார்த்திகா(23) என்ற பெண்ணிற்கும் கடந்த வருடம் பெற்றோர்கள் திருமணம் செய்து வைத்துள்ளனர்.

சில மாதங்கள் மட்டும் சந்தோஷமான இருந்த தம்பதிகளுக்கு, பின்பு சண்டை ஏற்பட்டுள்ளது. சம்பவத்தன்று சொந்தக்காரரின் திருமண விழா ஒன்றிற்கு சென்று வந்த கார்த்திகாவிடம் கணவர் தகராறு செய்து சண்டையிட்டுள்ளார்.

பின்பு என்ன நடந்தது என்று தெரியாத நிலையில், விடிந்ததும் கார்த்திகா தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாக பிரபாகரன் பெண் வீட்டாருக்கு தகவல் கொடுத்துள்ளார். இதனால் அலறியடித்து வந்த பெற்றோர் ஆத்திரத்தில் பிரபாகரனின் வீட்டை அடித்து நொருக்கியுள்ளனர்.

பின்பு பிரபாகரனையும் தாக்க முயன்ற போது பொலிசார் தடுத்து நிறுத்தியுள்ளனர். பொலிசாரிடம் தனது மகள் கொலை செய்யப்பட்டுள்ளார் என்று பெண்வீட்டார் புகார் அளித்துள்ளனர்.

அவர்களின் புகாரின் அடிப்படையில் பிரபாகரனைக் கைது செய்த பொலிசார், கார்த்திகாவின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பியுள்ளனர்.

பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பின்பே கார்த்திகாவின் மரணம் கொலையா? தற்கொலையா? என்று தீர்மாணிக்கப்படும் என்று கூறியுள்ளனர்.

பெண் வீட்டு தரப்பில் ஆவேசமும், கடுங்கோபமும் உள்ளதால் அப்பகுதியில் ஏராளமான பொலிசார் குவிக்கப்பட்டு தொடர்ந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.