பொலித்தீன் பையில் சுற்றப்பட்ட நிலையில் ஆணின் தலை கண்டெடுப்பு

கொழும்பு – பண்டாரநாயக்க மாவத்தையில் கறுப்பு நிற பொலித்தீன் பையில் சுற்றப்பட்ட நிலையில் நபர் ஒருவரின் தலை வாழைத்தோட்ட பொலிஸாரினால் மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று காலை வீதி துப்பறவு செய்யும் தொழிலாளர்களினால் அவசரப் பொலிஸ் பிரிவிற்கு வழங்கப்பட்ட தகவலை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் கறுப்பு நிற பொலித்தீன் பையினால் சுற்றப்பட்ட நிலையில் தலையை மீட்டெடுத்துள்ளனர்.

மீட்கப்பட்ட தலை 35க்கும் 40 வயதுக்கும் இடைப்பட்டவர் எனவும் முகம் முழுவதும் கறுத்திருப்பதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சம்பவ இடத்தில் குற்றப்புலனாய்வு பிரிவினர் தடயவியல் பிரிவினர் வாழைத்தோட்ட பொலிஸார் மற்றும் மாலிகாவத்தை பொலிஸார் குவிக்கப்பட்டு தீவிர விசாரணைகள் இடம்பெற்று வருகின்றது.

கொலை செய்யப்பட்டவர் இது வரை அடையாளம் காணப்படாத நிலையில் பொலிஸார் தீவிரமாக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் கொலையாளியை அடையாளம் காண குறித்த பகுதியை சூழவுள்ள சி.சி.டீவி கமராக்களை பரிசோதித்தும் மோப்ப நாயினை கொண்டும் சோதித்து வருகின்றனர்.

பிரிதொரு இடத்தில் கொலை செய்யப்பட்டு கொலையை மறைப்பதற்காக அல்லது வழக்கை திசை திருப்புவதற்காக தலையை மட்டும் கறுப்பு நிற பொலித்தீன் பையினுள் சுற்றி குறித்த இடத்தில் கொண்டு வந்து போட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் தெரிவிக்கின்றனர்.