செவிப்புலனற்றோருக்கான சர்வதேச கிரிக்கெட் – வீரர்களுக்கு BTCL நிதி ஆதரவு

கிரிக்கெட் என்று சொன்னவுடன் ஆர்ப்பரிக்கும் மைதானமும் ஆவேசமாக சத்தமிட்டு விளையாடும் விளையாட்டு வீரர்களும் நினைவுக்குள் வந்து செல்வார்கள். ஆனால் ஓசை எதுவும் இல்லாமல் சைகை மொழி மூலமும் ஒரு கிரிக்கெட்டை நமது உறவுகள் விளையாடி வருகின்றார்கள்.

அவ்வாறு விளையாடும் ஒரு விளையாட்டு கேட்டல் மற்றும் பேச்சு பாதிப்புக்கு உட்பட்டவர்களையும் ஊக்குவிக்கும் முகமாகமான கிரிக்கெட் ஒன்று இந்தியாவில் நடைபெற இருக்கின்றது. அதில் இலங்கை சார்பாக விளையாடுவதற்கு வட மாகாணத்திலிருந்து மூவர் தெரிவு செய்யப்பட்டிருக்கின்றார்கள்.

ரூட் நிறுவனத்தின் ஏற்பாட்டில் இந்தியா செல்லும் மூவருக்கு அவர்களுடைய பயண சிட்டைக்கான செலவினை ஏற்றுக் கொள்ளுமாறு DATA அமைப்பினரிடம் ரூட் நிறுவனம் வேண்டுகோள் விடுத்தது.

அந்த வகையில் அவர்களது பயண சிட்டடைக்கான செலவினை பிரித்தானிய தமிழ் கிரிக்கெட் சம்மேளனம் பொறுப்பேற்று அவர்களுக்கு தலா 47,000.00 ரூபா வீதம் 141,000.00ரூபா நன்கொடையாக அளித்துள்ளமைக்கு எமது மனமார்ந்த நன்றிகளை தெரியப்படுத்தி கொள்வதோடு 21.11.2019 அன்று DATA குழுவினர் வீரர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து உதவியினை வழங்கி வைத்தனர்.

பொதுவாகவே கேட்டல் பேச்சு பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகள் ஏனைய மாற்றுத்திறனாளிகளை போலல்லாமல் ஒரு சாதாரண மனிதர்களைப் போலவே தென்படுவர். அவ்வாறு அவர்கள் இருப்பதன் காரணமாக அவர்களுடைய தேவைகள் இந்த சமூகத்தில் பெரிதும் பேசப்படுவதில்லை.

சொல்ல முடியாத ஏக்கங்களும் அபிலாசைகளையும் அவர்கள் சொல்லாமல் தமக்குள்ளேயே புதைத்து வாழ்ந்து வருகின்றார்கள். அவ்வாறான ஒரு சமூக கூட்டத்தை அடையாளப்படுத்துவதற்கு இந்த கிரிக்கெட் ஒரு தளமாக இருக்கும் என்று நம்புகின்றோம்.

இதேவேளை விழிப்புலன் பாதிக்கப்பட்டவர்களும் சத்தப்பந்து கிரிக்கெட் போட்டியினை விளையாடுகின்றார்கள். அவர்கள் ஏற்கனவே தமிழ் பரா விளையாட்டு போட்டியில் ஒரு அங்கமாக உள்வாங்கப்பட்டிருக்கும் நிலையில் செவிப்புலன் பாதிக்கப்பட்டோருக்கான கிரிக்கெட்டும் இனிவரும் காலங்களில் தமிழ் பரா விளையாட்டு போட்டியின் ஒரு அங்கமாக உள்வாங்கப்படுவதற்காகவும் ஆலோசிக்கப்படுகின்றது.

அத்தோடு 2016, 2017, 2018 ஆகிய வருடங்களில் நடாத்தப்பட்ட தமிழ் பரா விளையாட்டுப் போட்டிகளின் ஊடாகவும் தேசிய, சர்வதேச ரீதியில் வீரர்களை பங்குபெற செய்வதற்கான முயற்சிகளையும் ஏற்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

பூமிப்பந்து எங்கிலும் வாழும் குறிப்பாக தமிழ் மக்கள் கிரிக்கெட் மீது உள்ள ஆர்வத்தை தாம் வாழும் பிரதேசங்களில் அதற்கான சம்மேளனங்கள் அமைத்து விளையாடி வருகிறார்கள். அவர்களும் பிரித்தானிய தமிழ் கிரிக்கெட் சம்மேளனத்தை போல பாதிக்கப்பட்டவர்களது கிரிக்கெட்ரிற்கு உதவுவதற்கு முன் வர வேண்டும் என்று அன்பாக கேட்டுக் கொள்கின்றோம்.