குழந்தையின் அழுகையை நிறுத்த தாய் செய்த கொடூர செயல்.. துடிதுடித்து உயிரிழந்த பச்சிளம் குழந்தை..!

வேலூர் மாவட்டத்தில் தொடர்ந்து அழுதுக் கொண்டிருந்த குழந்தையை வாயில் துணியை வைத்து அழுத்திய நிலையில் மூச்சுத்திணறி குழந்தை உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வேலூர் மாவட்டம் வாலஜா திரவுபதி அம்மன் கோவில் தெரு பகுதியை சேர்ந்தவர் கவுரி சங்கர்.

இவரது மனைவி பவித்ரா(22). இந்த தம்பதிக்கு ரம்யா(3) என்ற பெண் குழந்தையும், மவுலிகா என்ற 1 வயது பெண் குழந்தையும் உள்ளது.

இந்நிலையில், கணவன் மனைவிக்கிடையே கருத்து வேறுபாட்டினால் சண்டை ஏற்பட்டு வந்த நிலையில்,, பவித்ரா கணவரை பிரிந்து குழந்தைகளுடன் தனியாக வசித்து வருகிறார்.

இந்நிலையில், பவித்ரா காஞ்சிபுரத்தில் இருக்கும் ஜவுளிக்கடையில் பணியாற்றி வந்துள்ளார்.

கடந்த இரண்டு நாட்களாக பணிக்கு செல்லாமல் இருந்துள்ளார். இந்த நிலையில், நேற்றிரவு பச்சிளம் குழந்தையான மவுலிகா அழுதுகொண்டே இருந்துள்ளது.

குழந்தையின் அழுகையை நிறுத்த பல வகையில் குழந்தையை சமாதானப்படுத்தியுள்ளார். ஆனால் குழந்தை அழுகையை நிறுத்தாமல் தொடர்ச்சியாக அழுதுகொண்டே இருந்துள்ளது.

இதனால் செய்வதறியாது, முழித்த பவித்ரா குழந்தையின் வாயில் துணியை வைத்துள்ளார். இதனால் குழந்தை சிறிது நேரத்திலேயே மூச்சுதிணறல் ஏற்பட்டு மயங்கி விழுந்துள்ளது.

இதனால், பதற்றமடைந்த பவித்ரா, குழந்தையை எடுத்துக்கொண்டு அப்பகுதியில் இருந்த அரசு மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.

அங்கு, குழந்தையை பரிசோதித்து பார்த்த மருத்துவர்கள், ஏற்கனவே குழந்தை உயிரிழந்துவிட்டதாக கூறியுள்ளனர்.

இந்நிலையில், இந்த விஷயத்தை அறிந்த கிராம நிர்வாக அலுவலகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இவரின் புகாரை ஏற்ற காவல் துறையினர் குழந்தையின் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து, பவித்ராவை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.