அக்கா தூக்கில் தொங்குவதை பார்த்து அலறிய தம்பி: சத்தம் கேட்டு ஓடிவந்த உறவினர்கள்

தூத்துக்குடி மாவட்டத்தில் பள்ளி மாணவி தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்தவர் கருணாகரன். இவருடைய மனைவி பூரணசெல்வி. இந்த தம்பதியினருக்கு மரிய ஐஸ்வர்யா (16) என்கிற மகளும் ஒரு மகனும் உள்ளார்.

ஐஸ்வர்யா அரசு உதவி பெறும் தனியார் பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வந்தார். கடந்த சில தினங்களுக்கு முன் இரண்டு நாட்கள் விடுமுறை எடுத்துவிட்டு ஐஸ்வர்யா பள்ளிக்கு சென்றுள்ளார்.

இதனால் கணினி அறிவியல் ஆசிரியராக பணியாற்றி வரும் ஞானப்பிரகாசம் என்பவர், ஐஸ்வர்யாவை திட்டி தோப்புக்கரணம் போடச்சொன்னதாக தெரிகிறது.

இதனால் மனஉளைச்சலுக்கு ஆளான ஐஸ்வர்யா, பள்ளியில் நடந்த சிறப்பு தேர்வுக்கு கூட செல்லாமல் வீட்டில் இருந்துள்ளார். இதுகுறித்து பெற்றோர் கேட்டபோது, தனக்கு பள்ளிக்கு செல்ல விருப்பமில்லை என மாணவி கூறியுள்ளார்.

இதனையடுத்து சிறுமியின் பெற்றோரும் வேலைக்கு சென்றுவிட்டனர். இதனால் வீட்டில் ஆள் இல்லாத சமயம் பார்த்து சிறுமி தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

அப்போது பள்ளி முடிந்து வீடு திரும்பிய ஐஸ்வர்யாவின் தம்பி, அக்கா தூக்கில் தொங்குவதை பார்த்து கதறி துடித்துள்ளான். சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம்பக்கத்தினர், உடனடியாக ஐஸ்வர்யாவின் உடலை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு பரிசோதனை மேற்கொண்ட மருத்துவர்கள் சிறுமி, ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக கூறியுள்ளனர். இந்த சம்பவம் அறிந்து வந்த பொலிஸார் சிறுமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்ததோடு, பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.