வேறொரு பெண்ணுடன் கணவர் தகாத உறவு ஓடும் ரயிலில் இருந்து குதித்து பெண் தற்கொலை!

கணவனின் தகாத உறவு குறித்து கேட்டபோது, கணவர் திட்டியதால் மனமுடைந்த பெண் ஓடும் ரயிலில் இருந்து ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சென்னையில் நடந்துள்ளது.

சென்னையை அடுத்த, ஆவடியைச் சேர்ந்தவர் முரளி. இவரின் மகன் ரோஸ். இவருக்கும் ஜீவிதா என்பவருக்கும் கடந்த 2016 ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. இந்த தம்பதிக்கு ஒரு மகளும் ஒரு மகனும் உள்ளனர்.

இந்த நிலையில், ரோஸ், வேறு ஒரு பெண்ணுடன் தகாத உறவு வைத்திருந்தார். இதனை அறிந்த ஜீவிதா அதிர்ச்சி அடைந்துள்ளார். இது குறித்து கணவர் ரோசிடம் கேட்டுள்ளார். ஆனால், அவரது மாமனார் மற்றும் மாமியார் உள்ளிட்ட சிலர் வரதட்சணை கொடுமை செய்ததாக கூறப்படுகிறது.

இது குறித்து ஜீவீதா தனது குடும்பத்தாரிடம் கூறியுள்ளார். இதையடுத்து, ஜீவிதாவின் பெற்றோர்கள், ரோசின் பெற்றோர்கள் உள்பட சமாதானம் பேசி வைத்துள்ளனர்.

ஆனாலும், ரோஸ்-ன் வேறொரு பெண்ணுடனான தகாத உறவை தொடர்ந்து வந்துள்ளார். இது குறித்து ஜீவிதா மீண்டும், ரோசிடம் கேட்டுள்ளார். ஆனால் ரோஸ், ஜீவிதாவை கடுமையான சொற்களால் திட்டியதாக தெரிகிறது.

இதில் மனமுடைந்த ஜீவிதா, தற்கொலை செய்து கொள்ள மின்சார ரயிலில் ஏறியுள்ளார். ரயில் சென்னை, அடையாறு பாலம் அருகே வந்தபோது, ஜீவிதா, பாலத்தில் குதித்து தற்கொலை செய்துள்ளார்.

பாலத்தில் பெண் ஒருவர் ஆற்றில் குதிப்பதைக் கண்ட பயணிகள், ரயிலை நிறுத்தி உள்ளனர். ஆனாலும், அந்த பெண்ணை காப்பாற்ற முடியவில்லை என்று கூறினர்.

இது குறித்து, போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் ஜீவிதாவின் உடலைக் கைப்பற்றிய காவல் துறை, இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.

ஜீவிதாவின் கணவர் குடும்பத்தார் மீது, அவரது தாயார் போலீசில் வரதட்சணை புகார் கொடுத்துள்ளார். இந்த புகாரின் அடிப்படையில் விசாரணை நடைபெற்று வருகிறது.