கையில் குழந்தையுடன் வந்த தாய்: திடீரென ரயில்முன் பாய்ந்ததால் நேர்ந்த சோகம்

குழந்தைக்கு மருந்து கொடுப்பதில் தகராறு ஏற்பட்டதால், ஓசூரை சேர்ந்த பெண் ஒருவர் ரயில்முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இன்று அதிகாலை 4 மணியளவில் ஓசூர் ரயில்நிலையத்திற்கு பெண் ஒருவர் கையில் குழந்தையுடன் வந்துள்ளார். அப்போது பெங்களூருவை நோக்கி மயிலாடுதுறை விரைவு ரயில் வந்துகொண்டிருந்துள்ளது.

திடீரென அந்த பெண் கையில் வைத்திருந்த குழந்தையை ஓரமாக படுக்கவைத்துவிட்டு, ரயில்முன் பாய்ந்து உடல்சிதறி பலியாகியுள்ளார்.

இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பயணிகள் உடனடியாக பொலிஸாருக்கு தகவல் கொடுத்துள்ளன. ரயில்வேகமாக சென்றதில் கற்கள் சில ஓரமாக கிடந்த குழந்தையின் நெற்றியில் தாக்கியுள்ளது.

இதற்கிடையில் விரைந்து வந்த பொலிஸார், காயங்களுடன் கிடந்த குழந்தையை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் தற்கொலை செய்துகொண்ட பெண் குறித்து மேற்கொண்ட விசாரணையில், ஓசூரை அடுத்த மூக்காண்டப்பள்ளியை சேர்ந்த சுவேதா (25) என்பதும், உயிர்தப்பிய 10 மாத குழந்தை சுருதி லட்சுமி என்பதும் தெரியவந்தது.

நேற்று இரவு சுவேதாவிற்கும், அவருடைய கணவர் முரளிக்கும் இடையே குழந்தைக்கு மருந்து கொடுப்பது தொடர்பாக கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் மனவேதனையடைந்த சுவேதா, அதிகாலை வீட்டைவிட்டு வெளியேறி தற்கொலை செய்துகொண்டுள்ளார் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட குழந்தைக்கு பயப்படும் அளவிற்கு பெரிய காயம் எதுவும் இல்லை என மருத்துவர்கள் கூறியுள்ளனர்.